-

28 நவ., 2025

www.pungudutivuswiss.comவடக்கை முழுமையாக நோக்கி நகரும் வரலாற்றில் முதல் தடவை.. நாகமுத்து பிரதிபராஜா
டிட்வா புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது தற்போது மட்டக்களப்புக்கும் அமபாறைக்கும் இடைப்பட்ட மகா ஓயா பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசையில் நகரும். தற்போதைய நிலையில் இந்த புயலின் மையப்பகுதி முழுவதும் நிலத்தின் ஊடாகவே நகரும் வாய்ப்புள்ளது. ஆனாலும் நகர்வுப் பாதை இன்னமும் இறுதியாகவில்லை.
இந்த புயலின் மையம், மற்றும் உள்வளையம் ஆகியன வடக்கு மாகாணத்தின் முழுப் பகுதியையும் உள்ளடக்கியே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தற்போதைய நகர்வின் படி எதிர்வரும் 02.12. 2025 அன்று வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புயலின் மையம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ளமையால் இப்பகுதிகளில் ஒரு அசாதாரண அமைதி நிலவும். ஆனால் அது நிலையானதல்ல.
இந்த புயலினால் நாடு முழுவதற்கும் எதிர்வரும் 29.11.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும்.
அம்பாறை க்கு நாளை பிற்பகல் முதல் படிப்படியாக மழை குறையும். ஆனாலும் எதிர்வரும் 30.11.2025 வரை மழை கிடைக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்வரும் 29.11.2025 முதல் மழை படிப்படியாக குறைவடையும்.
ஆனால் திரு கோணமலை மாவட்டத்திற்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும்.
வவுனியா மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும். எதிர்வரும் 01.12.2025 அன்றும் வவுனியாவின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும். எதிர்வரும் 01 மற்றும் 02.12.2025 அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலைமைகளின் படி மன்னார் மாவட்டத்துக்கு நாளை முதல் எதிர்வரும் 01.12.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு அனுராதபுரத்தில்ஸகிடைக்கும் கனமழையும் குளங்களின் வான் பாயும் நீரும் ஏற்கெனவே குறிப்பிட்டபடி அருவியாற்றின் முகத்துவாரம் மற்றும் கீழ் நீரேந்து பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும்.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் படிப்படியாக இன்று இரவு முதல் கனமழை முதல் மிகக்கனமழையை எதிர்கொள்ளும். இது எதிர்வரும் 02.12.2025 வரை தொடரும்.
குறிப்பு: இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் கன மழை கிடைக்க தொடங்கும்.
தற்போது திருகோணமலை மற்றும் வடக்கு மாகாணத்தில் காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசுகின்றது. இது நாளை இன்னமும் அதிகரிக்கும்.
நாளையும் தென், ஊவா மற்றும் சபரகமுவா மாகாணங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும். ஆனால் நாளை மறுநாள் பிற்பகல் முதல் மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும். ஆனால்
எதிர்வரும் 30.11.2025 முதல் மேல மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் மழை குறைவடையும்.
இந்த புயலின் நகர்வுப்பாதை இதுவரை இல்லாதது போன்று அமையும் என தோன்றுகின்றது. இது அசாதாரணமானது. வட மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய வடக்கு நோக்கிய நகர்வு முற்றிலும் புதியது. 1867ம் ஆண்டு இலங்கையில் முதல் முதலாக நில அளவைத் திணைக்களத்தின் கீழ் விஞ்ஞான முறைகளிலான வானிலை அவதானிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இது போன்ற நகர்வுப் பாதையை எந்த புயலோ, தாழமுக்கமோ கொண்டிருந்ததில்லை. வரலாற்றில் இதுவே முதல் முறை.

ad

ad