புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

சென்னைப் பேரிடர் கற்றுக் கொடுத்த பாடம் என்ன?

சென்னை கூடுவாஞ்சேரி சிக்னல், வண்டலூர் பக்கத்துலதான் நாங்க வேலை பார்க்கிற டைல்ஸ் நிறுவனம் இருக்கு சார்! அங்கே
50 ஐம்பது பேருக்கு மேல பசியால துடிச்சுட்டு இருக்கோம். எங்களுக்கு ஏதாவது உதவி பண்ணுங்களேன்!” தொடர்ந்தும் அதே போல உதவி கோரி வந்த அழைப்புகளில் சில உதாரணங்கள் இவை...

* நந்தம்பாக்கம் காவல்நிலையம் பின்புறம், அடுக்குமாடியில் வெள்ளம். தேவை உணவு அல்லது மிதவைப் படகுகள்.

* ஏ.ஜி.எஸ்.காலனி, ராம்நகர், தேவி கருமாரியம்மன் தெரு, சான் அகாடமி அருகே ஆயிரம் பேர் உணவின்றி தவிப்பு. அவசரத் தேவை மிதவைப் படகு.
* ஜாபர்கான் பேட்டை, பால கிருஷ்ணன் தெரு, பத்மாவதி இல்லம் மொட்டை மாடியில் கைக் குழந்தைகள், சிறு பிள்ளைகளுடன் 150 பேர் காத்திருப்பு. அவசரத்தேவை குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் பாக்கெட்டுகள், சில முதியோருக்கு உணவு, போர்வை, இரண்டு மிதவைப் படகு.

* போரூர் ராமாபுரம், கலசத்தம்மன் கோயில் தெரு, மூகாம்பிகை நகரில் இளம் பெண் ஒருவர் பிரசவ வலியால் பரிதவிப்பு. உடனடித் தேவை மீட்புப் படகு, ஒரு மருத்துவர், சுத்தமான குடிநீர்.

* ஜோதி நகர் முதல் குறுக்குத் தெரு. முடிச்சூர் சாலை, தாம்பரம் மேற்கு. 12 குடும்பங்கள் தவிப்பு. அவசரத் தேவை ஒரு மீட்புப் படகு. கொஞ்சம் உணவு, பால் பாக்கெட்.

* கீழ்க்கட்டளை சக்தி நகரில் கர்ப்பிணி பெண் உள்பட 11 குடும்பங்கள் தவிப்பு. அவசரத் தேவை ஒரு மீட்புப் படகு. குடிநீர்.

*  சென்னை அசோக் நகரில் ஒரு இறந்துபோன தன் தாயாருடன் தவிப்பதாக ஒருவர் கதறினார்.  உடனடித் தேவை, ஒரு மீட்புப் படகு. 

2.12.2015 பிற்பகல் முதல் இந்த தகவல்கள் கிடைத்ததும் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் அவசர கால தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டோம். சென்னை மாநகராட்சியின் தொலைபேசி எண்கள், பேரிடர் மீட்புக் குழுவினரின் அவசர உதவி எண்கள் என்று காலை முதல் இரவு வரையில் இடைவிடாமல் தொடர்பு கொண்டோம். தி.மு.க.வின் மீட்புக்குழு, நடிகர் விஜய்யின் திருமண மண்டபத்தில் உணவுடன் தங்கும் உதவி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், த.மு.மு.க., ம.ம.க., ஆகியோரின் உணவு ஏற்பாடு என இவர்களைத் தொடர்பு கொள்ளச் சொல்லியும் தகவல்கள் பரவின.
இது தவிர முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், கடலோரக் காவல் படையின் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஆகியோரும் தத்தமது அணியோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

இவ்வளவு பேர் களத்தில் உதவி செய்து கொண்டிருந்தும், மேலும் பலர் உதவி செய்யத் தயாராக இருந்தும், அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோதுதான் கசப்பான அந்த உண்மை புரிந்தது. இரண்டொரு தனியார் அமைப்புகளைத் தவிர வேறெந்த எண்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் கோபுரங்கள் வெள்ளத்தால் சூழ்ந்தும், சாய்ந்தும் தொடர்பு வசதிகள் முற்றிலுமாகச் செயலிழந்திருந்தது. ஓரிரு நிறுவனம் தவிர்த்து பெரும்பாலான செல்போன் நிறுவனங்களின் சேவையும் முடக்கப்பட்டிருந்தது. 

இதில் இன்னொரு விநோதம் என்னவென்றால், உதவி செய்யக்கூடிய அமைப்புகளின் எண்களின் இணைப்புதான் நமக்குக் கிடைக்கவில்லை. அதே வேளையில் 'உதவி கேட்டு'க் கதறியவர்களின் எண்கள் வேலை செய்தது. இதற்கு காரணம், சேவை அமைப்புகளுக்கு அதிகளவிலான அழைப்புகள் ஒரே சமயத்தில் வந்ததுதான் காரணமாக இருக்கும். பேரிடர் சமயங்களில் தகவல்களை ஓரிடத்தில் சேகரித்து, பகுத்து, தேவைப்படும் உதவிகளை உடனடியாக மேற்கொள்வதற்கான சாத்தியங்களே இல்லாமல் இருக்கிறது.
ஆயிரம் பொதுக்கூட்டங்கள் போட்டு பிரசாரம் செய்தாலும் உணர்த்த முடியாத ஒரு கருத்தினை இயற்கை உணர்த்தியிருக்கிறது. அது.... இயற்கையை எந்த செயற்கையாலும் வெல்ல முடியாது என்பதே. பேரிடர் மேலாண்மை என்பதே தமிழகத்தில் துச்சமென மதிக்கப்படும் வார்த்தையாகத்தான் இருக்கிறது. இனிமேலும் தாமதிக்காமல், காவல் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கென பிரத்யேக வசதி இருப்பது போல, பேரிடர் மேலாண்மைக்கும் பிரத்யேக நிர்வாகத்தை உண்டாக்கி, அதை மாநிலம் முழுக்க இணைக்க வேண்டும்.

அவசர கால சேவைகளுக்குத்தான் தகவல் தொடர்புகள். ஆனால், அந்த அவசர காலத்தில் அந்த சேவை கிடைக்கவில்லையெனில், அதனால் என்ன பயன்? 

எல்லாம் சரி. ஆனால், இதெல்லாம் நடக்கும் வரை நாம் என்ன செய்வது? அரசாங்கம் எல்லா வேலையும் செய்யும் எனக் காத்திருக்காமல், ஒவ்வொரு வார்டிலும் வீட்டுக்கு ஒரு இளைஞன் தன்னார்வத் தொண்டனாக வந்துதான் நிலமையைச் சமாளிக்க வேண்டும்

ad

ad