யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் “ஆவா 001 இராஜ்ஜியம்” என எழுதப்பட்டுள்ளமை மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த பதத்தை எழுதிய பின்னணியில் விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
யாழில்.ஆவா எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக பொலிஸார் கூறி வருகின்றனர்.
அந்தவகையில் வாள் வெட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் பல இளைஞர்கள் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு,குற்றச்செயல்களின் பின்னணியின் பாரிய சக்தி ஒன்று இருப்பது மக்கள் அனைவரும் அறிந்ததே.
இருந்தும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை சிறீலங்கா பொலீசார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினாலும் அவர்களை ஒருசில சட்டத்தரணிகள் பிணையில் எடுப்பதற்காக முந்தியடித்துக்கொண்டு இருக்கின்றதை மக்கள் அவதானித்துள்ளார்கள்.
ஆவா குழுவை யாழில் வைத்து இயக்குவதன் ஊடாக வடக்கில் தமிழ் மக்களை அடக்கி ஆழ சிறீலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக மக்களை என்றும் அச்சத்தில் வைத்திருப்பதையே சிறீலங்கா அரசும் படை புலனாய்வாளர்களும் அவர்களுக்கு பின்னால் இருந்து செயற்படும் அரசியல் வாதிகளும் விரும்பி வருகின்றார்கள்.
அதன் வெளிப்பாடாகே யாழில் இவ்வாறான குழுக்கள் குற்றச்செயல்களை செய்யவைத்து மக்களை அச்சத்திற்குள் கொண்டு செல்கின்றார்கள் இவர்களின் பின்னணியில் பாரிய சக்தி ஒன்று இயங்கிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்மக்களின் ஒற்றுமையினை சீர்குலைத்து படித்த சமூகத்தினையும் பணம் படைத்தவர்களையும் என்றும் அச்சத்திற்குள் வைத்திருக்கும் முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.