3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு
நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூடும்போது சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 3ஆம் திகதி நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில் அதுதொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. இங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி இடம்பெற இருக்கும் 8ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்தல் மற்றும் ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை அறிவிப்பது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய முறைகள் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதியினால் அரச கொள்கைத்திட்டத்தை வெளியிட்டதன் பின்னர் பிற்பகல் 12,30 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதுடன், அதன்போது 2020 ஜனவரி 7ஆம் திகதி முதல் சபை நடவடிக்கைகள் இடம்பெறவேண்டிய முறைதொடர்பாக கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் திகதி பிற்பகல் 1மணி முதல் மாலை 6மணிவரை நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
அதன்போது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வது, சபாநாயகரால் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக உத்தியோக பூர்வமாக அறிவிப்பு செய்தல் மற்றும் அக்கிராசனத்தில் இருந்து மேற்கொள்ளவேண்டிய வேறு விடயங்களை முன்வைக்கும் ஒழுங்குவிதிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
(அத்துடன் சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் ஜனவாரி 3ஆம் திகதி சபை ஆரம்பத்தின்போதே எதிர்க்கட்சி தலைவர் ஆசனம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சி தலைவர் கூட்டத்துக்கு அறிவித்திருந்தார்)
மேலும் ஜனவாரி 3ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற சபை முதல்வர் பதவி மற்றும் ஆளுங்கட்சி பிரதம கொறடா பதவிக்குரியவர்கள் தொடர்பாக தனக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிடம் அறிவித்தார்.
கட்சி தலைவர் கூட்டத்தின்போது விசேடமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கவனம்செலுத்தப்பட்டது. அவரது கைதானது இதுவரை பின்பற்றிவந்த பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயலாகும் எனபொதுவாக ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது. இதுதொடர்பாக காவல் துறை மா அதிபர் உட்பட குறிப்பிட்ட அதிகாரிகளை சபாநாயகர் முன்னலையில் அழைத்து அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கைதுசெய்யும்போது இடம்பெற்றுள்ள செயற்பாடுகள் தொடர்பாக காவல் துறை ஆணைக்குழுவின் கவனத்தை செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, தினேஷ் குணவர்த்தன, மஹிந்த அமரவீர மற்றும் டலஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, அஜித் பி பெரேரா, மனோகணேசன் மற்றும் நிரோஷன் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.