கோத்தபாயவை சிக்க வைக்க கூடிய ஆவணங்களுடன் காணப்பட்ட சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்களே காணாமல் போயுள்ளது
சிறைச்சாலையில் நடந்த மோதலில் 27 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் வழங்கிய ஆரம்ப வாக்குமூலங்கள் தொடர்பான பதிவு ஆவணங்கள் காணாமல் போயுள்ளன.
குறித்த ஆவணங்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தின் பிரதான சாட்சியாளர்களான வெலிகடை சிறைச்சாலையின் அன்றைய பிரதான சிறை காவலர் பல்லேகும்புர வளாவ்வே குடா பண்டார என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி வழங்கிய ஆரம்ப வாக்குமூலம், கைதியான செனரத் பந்துல லியனாராய்ச்சி மற்றும் மரண தண்டனை கைதியான இந்திக பெரேரா ஆகியோர் வழங்கிய ஆரம்ப வாக்குமூலங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளன.
இந்த சாட்சியாளர்களின் வாக்குமூல ஆவணங்கள் காணாமல் போயிருப்பதன் மூலம், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்களம் பக்கசார்பாக நடத்தியுள்ளது தெளிவாக புலனாகியுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் அன்றைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அன்றைய எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்கமை குறிப்பிடத்தக்கது.