வவுனியா - மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ளார். அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மரணவிசாரணை அதிகாரி க. ஹரிப்பிரசாத் தெரிவித்தார்.
வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 9 ஆம் திகதி வருகை தந்த நிலையில் குறித்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த இருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் தயாருடன் வசித்து வந்த நிலையில் தாயார் நேற்று உடல்நலக்குறைவால் மரணித்துள்ளார்.
குறித்த பெண் மற்றும் அவரது பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் வவுனியா வைத்தியசாலைக்கு கடந்த 12 ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இப்பெண் மரணித்தமைக்கான காரணத்தினை அறிந்து கொள்வதற்காக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அவரது உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது இரு பிள்ளைகளுக்கும் மரணித்தவரின் பேரனுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.
எனினும் இறந்த பெண்ணின் சடலம் உடனடியாக தகனம் செய்யப்பட்டுள்ளதுடன் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்