ஹம்பாந்தோட்டையில் வெள்ளிக்கிழமை (11) நிறைவுக்கு வந்திருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதி குழுநிலைப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி தம்புள்ள வைகிங் அணியினை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகிய கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய இரண்டு அணிகளும் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தினைப் பெறும் நோக்கில் இந்த மோதலில் களமிறங்கியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிங்ஸ் அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தம்புள்ள வைகிங் அணிக்கு வழங்கியிருந்தார்.
இலங்கையுடன் மோதும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து குழாம்கள் அறிவிப்பு
இப்போட்டியில் பங்கேற்ற இரண்டு அணிகளும், அரையிறுதி அழுத்தம் இல்லாத காரணத்தினால் இளம் வீரர்களுக்கு தத்தமது குழாம்களில் வாய்ப்பினை வழங்கியிருந்தன.
கொழும்பு கிங்ஸ் – லோரி எவன்ஸ், தினேஷ் சந்திமால் (WK), அசான் ப்ரியன்ஜன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (C), கைஸ் அஹமட், துஸ்மந்த சமீர, தரிந்து கௌஷால், ஹிமேஷ் ரத்னாயக்க, டேனியல் பெல் ட்ரம்மன்ட்
தம்புள்ள வைகிங் – தம்புள்ள வைகிங் – நிரோஷன் டிக்வெல்ல (WK), உபுல் தரங்க, அஞ்செலோ பெரேரா, கவிந்து நதீஷான், சமித் பட்டேல், தசுன் ஷானக (C), சமியுல்லா ஷின்வாரி, ரமேஷ் மெண்டிஸ், மலிந்த புஷ்பகுமார, அன்வர் அலி, லஹிரு குமார
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய தம்புள்ள வைகிங் அணி, தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறிய போதும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் சிறந்த முறையில் ஓட்டங்களைக் குவித்தனர்.
இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு தம்புள்ள வைகிங் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தம்புள்ள வைகிங் அணிக்காக இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தினை பதிவு செய்த அஞ்செலோ பெரேரா 51 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில் நிரோஷன் டிக்வெல்லவும் அரைச்சதம் பூர்த்தி செய்து 40 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இலங்கையுடன் மோதும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து குழாம்கள் அறிவிப்பு
கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்பந்துவீச்சாளரான கைஸ் அஹ்மட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 204 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணி, போட்டியின் வெற்றி இலக்கினை கைஸ் அஹ்மட், லோரி எவன்ஸ் ஆகியோரின் அதிரடியோடு 18.5 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களுடன் அடைந்தது.
கொழும்பு கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கடந்த போட்டியில் சதம் பெற்றிருந்த லோரி எவன்ஸ் 24 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதேநேரம், போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கைஸ் அஹ்மட் வெறும் 22 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவர்களோடு அஷான் பிரியஞ்சனும் 28 பந்துகளில் 47 ஓட்டங்கள் பெற்று தனது பங்களிப்பினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை – தென்னாபிரிக்கா தொடர் நடைபெறுவது உறுதி
தம்புள்ள வைகிங் அணியின் பந்துவீச்சு சார்பில் சமித் பட்டேல், தசுன் ஷானக்க, அன்வர் அலி மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு கிங்ஸ் அணிக்காக சகலதுறைகளிலும் அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த கைஸ் அஹ்மட் மாறினார்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் கொழும்பு கிங்ஸ் அணி, லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புள்ளிகள் அட்டவணையில் 6 வெற்றிகளைப் பதிவு செய்து முதலிடத்தினைப் பெற்றிருக்கின்றது.
அதேநேரம், குழுநிலைப் போட்டிகள் யாவும் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை கொழும்பு கிங்ஸ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) எதிர்கொள்ள, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தம்புள்ள வைகிங் திங்கட்கிழமை (14) ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தவிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்