ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5வது வருட நினைவு தினம் இன்று காலை 8.40 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உட்பட பல தேவாலயங்களிலும் இடம்பெற்றுள்ளது. பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் தூதர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி கிடைக்க வேண்டுமென பேராயர் கடும் தொனியில் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் உதவி ஆயர்கள் தலைமையில் ஆராதனை நிகழ்வும் இடம்பெற்றுள்ளன. கொழும்பு, நீர்கொழும்பு மற்று கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள மூன்று கிறிஸ்த்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 277 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருந்தனர். |