உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏழு வேண்டுகோள்களை விடுத்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், பொதுமக்களிற்கு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வழக்குகளை கண்காணிப்பதற்கு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைத்து சக்திகளையும் அடையாளம் காண வேண்டும், உண்மையை மக்களிற்கு தெரிவிக்க வேண்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் அவர்கள் எந்த பதவியிலிருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். 2019ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதியிடப்பட்ட விசாரணைகைள மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும், முக்கிய சாட்சியான ஆசாத் மௌலானா தெரிவித்த விடயங்கள் உட்பட சனல் 4 இன் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதித்திட்டத்திற்கு காரணமான துணை இராணுவ குழு கட்டமைப்புகளை செயல் இழக்கச்செய்வதற்காக புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை ஆள்வதை விட மக்களிற்கு சேவையாற்றுவதை உறுதி செய்யும் புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும். |