இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்புதல்
இந்தியாவின் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் இவ்வாறு தாம் பயிற்சி பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுலா வீசா மூலம் தமிழகத்திற்கு சென்று பயிற்சி பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் தலைமுறைப் படைப் பிரிவு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழகத்தில் பயிற்சி பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள், உணவு மற்றும் பயணச் செலவுகள் ஆகியன அனைத்தையும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த இரண்டு மாணவர்களைத் தவிர வேறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆயுதப் பயிற்சி பெற்றக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.