நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் என் தந்தை: ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு
பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி காயமடைந்தார். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெகதிஸ்ரீகுமார் தனது தந்தை என்றும் அவரை ஆஸ்பத்திரியில் பார்க்கவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் லட்சுமி (18) என்ற இளம்பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் அவர், ‘’நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் எனது தந்தை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அவரை காண நானும் என் தாய் சசிகலாவும் சென்றோம். ஆனால் எங்களை வார்டுக்குள் அனுமதிக்கவில்லை. ஜெகதிஸ்ரீகுமாரின் மனைவி பார்வதியும் அவரது மகன் ராஜ்குமாரும் எங்களை தடுத்து நிறுத்தினார்கள். உள்ளே வந்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.
என்னை தந்தை பார்த்தால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவரை பார்ப்பதற்கு எனக்கும் எனது தாயாருக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.
எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசில் புகார் அளித்தும் பாதுகாப்பு அளிக்கவில்லை. எனவே திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் மற்றும் நேமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் போலீஸ் கமிஷனர் இன்ஸ்பெக்டர் மற்றும் பார்வதி, ராஜ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.