புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2014


பிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி! தமிழ் இளைஞர்களை கொன்றவர்கள் தேசியவாதிகள்!- பிரதியமைச்சர் முரளிதரன்
இந்திய இராணுவம் முல்லைத்தீவு காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த போது 40 மட்டக்களப்பு போராளிகளுடன் சென்று முற்றுகையினை உடைத்து விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பாற்றிய நாங்கள் இன்று துரோகிகள். அன்று இந்திய இராணுவத்துடன் சேர்ந்து எமது இளைஞர்களைக் கொன்றவர்கள் தேசியவாதிகளாக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளா திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,  பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன்.ரவீந்திரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன்,  அனர்த்த முகாமைத்து நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பிரதியமைச்சரின் பட்டிப்பளை பிரதேச இணைப்பாளர் அலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கான சுமார் 15ஆயிரம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாங்கள் கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம். எமது சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. அந்தப் பொறுப்பில் இருந்து நாங்கள் விலகிச் செல்ல முடியாது. சமூகம் பாதிக்கப்படும் நிலையில் இருந்து விடுவிக்க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டியது அனைவரது கடமையுமாகும்.
இன்று முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது அங்கிருந்து எந்த அமைச்சரும் அரசாங்கத்தினை விட்டுச் செல்லவில்லை. அவர்கள் தங்களது இனத்துக்கு ஏற்பட்ட அநீதிகளுக்காக அரசாங்கத்துக்குள் இருந்து கடுமையாக குரல் கொடுத்து  வருகின்றனர்.  அரசாங்கத்துடன் சண்டை செய்கின்றனர்.
நாங்கள் அரசாங்கத்துக்குள் இருக்கும் போது எமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று சமூகத்துக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் போது அரசாங்கத்துக்குள் இருந்தே குரல் கொடுக்கலாம்.
ஆனால் நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டு எவற்றையும் அடைய முடியாது எமது சமூகத்தினை இன்னும் கீழ் நிலைக்கு கொண்டு செல்வதால் நாங்கள் இன்னும் பின்னோக்கியே நகர்த்தப்படுவோம்.
இப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளேன். காஞ்சிரஞ்குடாவில் இறங்குதுறை அமைத்து அங்கிருந்து இயந்திர படகு சேவையினை மேற்கொள்ளும் வகையில் 50 லட்சம் ரூபா நிதியை பெற்றுக் கொடுத்துள்ளேன்.
இதேபோன்று அரசடித்தீவு, அம்பிளாந்துறை பாடசாலைகளுக்கும் நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளேன்.  நான் ஒரு அமைச்சராக இருந்த காரணத்தினாலேயே இவற்றினை செய்ய முடிகின்றது. இவற்றினை எதிர்க்கட்சிகளில் இருந்து கொண்டு செய்ய முடியாது. இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த 30 வருட கால எதிர்ப்பு அரசியல் காரணமாக நாங்கள் எதனையும் பெறவில்லை. எமது உரிமைகளை, கல்வி நிலையை நாங்கள் காப்பாற்ற வேண்டும். இந்த விடயத்தில் மட்டக்கள்பு மக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதிலும் இந்த விடயங்களில் இந்த படுவான்கரை பிரதேச மக்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் படுவான்கரை பிரதேச மக்கள். வீட்டுக்கு இரண்டு மூன்று பேரை இழந்துள்ளனர்.அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும்.
வறுமையின் முதல் மாவட்டத்தில் இருந்து விடுபட்டு நான்கு மாவட்டங்களை நாங்கள் கடந்துள்ளோம். வாழ்வாதாரம் உயர்ந்து வருகின்றது. இன்று தான் எமது மக்கள் வாழ்கின்றனர். இன்னும் 10வருடங்களில் எமது மக்களின் வாழ்க்கை மட்டம் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 40 சிறு குளங்களை புனமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன்.
இதேபோன்று வெலிக்கந்தையினையும், படுவான்கரையினையும் இணைக்கும் மிக முக்கிய வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். அவற்றினை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.
கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பாக இருந்த படுவான்கரை பிரதேசம் இன்று எவ்வாறு உள்ளது என்பதை எமது மக்கள் ஆராய வேண்டும். அதற்கேற்றாற்போல் எதிர்காலத்தில் திட்டமிட்டு செயற்பட்டு வரவேண்டும்.

ad

ad