புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2015

விளையாட்டு வினையானது; தோழியால் கழிவறைக்குள் பூட்டப்பட்ட பள்ளி மாணவி பரிதாப சாவு!

 சக தோழியால் விளையாட்டாக கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட 6 வயது பள்ளி மாணவி இறந்த சம்பவம் பெரும்
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தேனாம்பேட்டை, ஆலயத்தமன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி. இவர்களது இரண்டாவது மகள் தர்ஷினி (6). இவள் தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்ஷினியும், அவளது சக தோழியும் கழிவறைக்கு சென்றிருக்கின்றனர். அப்போது, சக தோழி, தர்ஷினியை விளையாட்டாக கழிவறையில் வைத்து பூட்டி வைத்திருக்கிறாள். இதையடுத்து, தர்ஷினி அலறி இருக்கிறாள். இருப்பினும், அவளது குரல் யாருக்கும் கேட்க வில்லை எனத் தெரிகிறது.

சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு தர்ஷினி கழிவறையில் பூட்டி வைக்கப்பட்ட சம்பவம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, நிர்வாகத்தினர் கழிவறையை திறந்து பார்த்த போது மாணவி மயக்கத்தில் இருந்திருக்கிறாள்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். விரைந்து வந்த பெற்றோர், மாணவி தர்ஷினியை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், தர்ஷினி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. ஆனால், பள்ளி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்துள்ளது. எனவே, தர்ஷினி சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோஷமிட்டனர்.

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad