புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2015

'ம.தி.மு.க' தலைவர் விஜயகாந்த்... முதியவர் ஸ்டாலின்... அள்ளு கிளப்பிய அ.தி.மு.க அமைச்சர்கள்!

 அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனியப்பன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, ம.தி.மு.க. தலைவர் என கூறினார். 


'நமக்கு நாமே' என்ற தலைப்பில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினும், 'மக்களுக்காக மக்கள் பணி' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் தமிழகம் முழுக்க சுழன்று வருகிறார்கள். ஸ்டாலின்  நடைபயணம் செய்கிறார் என்றால், விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் செய்கிறார். இருவரும் சராமாரியாக அ.தி.மு.கவை விளாசித்தள்ளுகிறார்கள். இதையெல்லாம் கொடநாட்டில் இருந்தபடி கவனித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னுடைய பங்குக்கு  அமைச்சர்களை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் நான்கரை ஆண்டு சாதனைத்திட்டங்களை விளக்கியும், தி.மு.கவின் பொய் பிரசாரத்தை கண்டித்தும், அ.தி.மு.க.வினர் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மொத்தத்தில் இப்போதே சூடாகிவிட்டது தேர்தல் களம்.  

அதன்படி, நேற்று தருமபுரியில் அ.தி.மு.க.வின் நான்கரை ஆண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது. வீட்டுவசதி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், திரைப்பட நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

'ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் எதிர்காலம்' என்று என்று எக்கச்சக்க ப்ளெக்ஸ்கள் அணிவகுத்தன.
முதலில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்,  “அம்மாவின் சாதனைகளை எடுத்துச்சொல்ல வேண்டுமானால் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்ககூடிய சாதனை, புரட்சித்தலைவி சாதனை. அதனை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால்,  எதிர்க்கட்சியில் இருக்கிற பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக்கழத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினாக இருந்தாலும் சரி அல்லது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தாக இருந்தாலும் சரி... (விஜயகாந்த் ம.தி.மு.க. தலைவரா? என்ன சொல்றீங்க அமைச்சரே...!?) யாராக இருந்தாலும் நான்கரை ஆண்டுகாலம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, 2016 லே தேர்தல் வருகிறது, அம்மாவைப்பற்றி தவறாக சொன்னால் ஆட்சியைப் பிடித்துவிடாலாம் என்று தெருத்தெருவாக, ரோடு ரோடாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
முல்லைவேந்தன் என்று ஒருவர் இருக்கிறார். தி.மு.க.வில் இருந்து ஒரு குடிகார கட்சியில் போய் சேர்ந்து கொண்டு அவர் என்னைப்பற்றி பேசுகிறார். அவர்கள் கூட்டம் நடத்தினார்களாம், அவர்கள் ப்ளெக்ஸ் போர்டை அ.தி.மு.க.வினர் கிழித்தார்களாம். உங்க கட்சி ஆளேத்தான்யா கிழிச்சிருக்கான், நாங்க கிழிக்கலை. அம்மாவை பத்தி தப்பு தப்பா பேசியிருக்க. நாங்க உன் பேட்டியை பார்த்தோம், ஆடியோவை கேட்டோம். எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கணும். இல்லைனா அவ்வளவுதான். நீங்க இந்த தருமபுரியில ஒரு கூட்டம் கூட நடத்த முடியாது.

கொஞ்ச நாளைக்கு முன்பு இங்கு நடந்த கூட்டத்துல விஜயகாந்த் பேசுறார். அவருக்கு பழனியப்பனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் வித்தியாசம் தெரியல (சார் நீங்க ஆரம்பத்துல ம.தி.மு.க தலைவர் விஜயகாந்த்னு சொன்னீங்க..) அவருக்கு முதலமைச்சர் பதவி வேண்டுமாம், அன்புமணிக்கு முதலமைச்சர் பதவி வேண்டும், அவ்வளவு ஏன் டிராஃபிக் ராமசாமி கூட முதலமைச்சராகலாம்னு ஆசைப்படுறார். முதலமைச்சர் பதவி ஒண்ணும் கடையில விக்கிற பேனா கிடையாது. மியூஸிக்கல் சேர் கிடையாது பாட்ட நிறுத்துன உடனே போய் உட்காருவதற்கு. அதற்கு அறிவும், ஆற்றலும், தைரியமும், துணிச்சலும் மிக்க தலைமை வேண்டும். அது எங்கள் அம்மாவுக்கு மட்டுமே இருக்கிறது'' என்று முடித்தார்.
அடுத்ததாக பேசிய அமைச்சர் வைத்திலிங்கம் “காவிரி பிரச்னையிலிருந்து கச்சத்தீவு பிரச்னை வரைக்கும் தி.மு.க தமிழகத்தை கைவிட்டுவிட்டது. கருணாநிதி சுயநலவாதியாக செயல்பட்டிருக்கிறார். ஆனால், இப்போது நீதி கேட்டு புறப்பட்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்கெல்லாம் நாங்கள் நீதி கேட்கட்டுமா..? மதுவிலக்கை ரத்து செய்தது யார்..? அன்றைக்கு சிறப்பு நிதி வாங்கி நிதிநிலையை சமாளிப்பதை விட்டுவிட்டு  மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதியால்தான் தமிழகத்தில் இன்றைக்கு இந்த நிலை.

ஸ்டாலினுக்கு முதியோர் தொகை

ஆனால், அம்மா செய்திருக்கும் ஒவ்வொரு சாதனையும் வரலாற்றில் பதியக்கூடியது. இந்தக் கட்சியில்  அடிமட்டத்தொண்டன் கூட  இங்கு வந்து அமைச்சராக உட்கார முடியும். ஆனால், அங்கு அப்படியா? கருணாநிதி என்றால் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி. ஐ.பெரியசாமி என்றால் அவருக்கு அடுத்து அவர் மகன். இப்படி குடும்ப அரசியல்தான் அங்கு இருக்கிறது. ஸ்டாலின் பொருளாளராக இருப்பாராம். இளைஞரணி செயலாளராகவும் அவரே இருப்பாராம். நாங்களே உங்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்கலாமா என்று யோசிக்கிறோம். இந்த வயதில் இளைஞரணிச் செயலாளராம்.
எங்கள் அம்மாவைப்பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது. அம்மாவைப்பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை. அம்மா ஜாதி பார்ப்பதே இல்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் மனித ஜாதி ஒன்றுதான். ராமதாஸ் ஜாதி என்று சொல்லி உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். இது புண்ணிய பூமி. இங்கு எல்லாரும் மனிதர்கள். ஜாதி என்பதே இல்லை. தருமபுரி மக்கள் எம்.பி தேர்தலில் பாவம் செய்து விட்டீர்கள். வரும் சட்டமன்றத்தேர்தலில் அந்த பாவத்தை போக்கிக்கொள்ளுங்கள்'' என்ற வேண்டுகோளோடு முடித்தார்.

ad

ad