இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 5 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி தனது கடைசி எட்டு 20 ஓவர் தொடர்களை இழந்ததில்லை. இதனால், இன்று நடைபெறும் 5வது மற்றும் இறுதி போட்டி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். இதில், ரோகித் 64 (34 பந்துகள் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள்) ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.
எனினும், மறுமுனையில் விளையாடிய கோலி அதிரடியான ஷாட்களை அடித்து ரன்களை சேர்க்க தொடங்கினார். மற்றொரு வீரரான சூர்ய குமார் யாதவ் 32 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். அவர் 17 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசினார். அவருக்கு பின் வந்த ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடியாக விளையாடினார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் கோலி அடித்த அரை சதம் இந்திய அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்து உள்ளது. கோலி 80 ரன்கள் (52 பந்துகள் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள்) மற்றும் பாண்ட்யா 39 ரன்கள் (17 பந்துகள் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதனால், இங்கிலாந்து அணிக்கு 225 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.