அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். அலபாமா மாநிலத்தை நேற்று வெப்பமண்டல புயல் ஒன்று தாக்கியது. இதனால் அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்தது.
அப்போது வட்லர்க்கவுன்டி என்ற இடத்தில் ஆதரவற்ற குழந்தைகளை ஏற்றுக் கொண்டு சென்ற சிறிய பேருந்து ஒன்று மழைநீரில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதனையடுத்து பேருந்தின் பின்னால் அதிவேகமாக வந்த 18 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் வாகனங்கள் தீ பிடித்து எரிந்ததால் அலபாமா நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்த மக்கள் பற்றி எறிந்த வாகனங்களில் இருந்த ஓட்டுநர்களையும், குழந்தைகளையும் மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி 9 சிறுவர், சிறுமிகளும், 29 வயது ஓட்டுநர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி வாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது