ஒருகட்சி ஆட்சிமுறையை ஏற்படுத்த என்பிபி அரசு முயற்சி! [Tuesday 2025-08-26 07:00] |
![]() நாட்டில் நடைமுறையிலுள்ள பல கட்சி ஆட்சி முறைமையை ஒழித்து ஒரு கட்சி ஆட்சியை நிலைநிறுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார போக்கினை தடுப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். |
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆட்சியைப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே எதிர்க்கட்சிகளை இவ்வாறு ஒன்றிணைத்தமைக்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாம் எதற்காக ஒன்றிணைந்தோம் என்பதை அனைவரும் அறிவர். ரணில் விக்கிரமசிங்க என்பது ஒரு காரணியாகும். ஆனால் இந்த தேசிய மக்கள் சக்தி நாட்டில் தொடர்ந்தும் காணப்படும் பல கட்சி ஆட்சி முறைமையை இல்லாதொழித்து ஒரு கட்சி ஆட்சி முறைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்தையும் அடக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். தாம் நினைப்பது மாத்திரமே சரி என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். நாட்டு மக்கள் ஜனநாயகத்தையே விரும்புகின்றனர். எனவே தான் அரசியல் பேதங்கள் இன்றி ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எம்மை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதிக்கு விசேடமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்று நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக நிலைப்பாட்டிலேயே சகலரும் காணப்படுகின்றனர். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு அதிகளவில் வாக்களித்து மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். தற்போது நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பொது மக்களே உள்ளனர். குறிப்பாக தொழிற்சங்கள் இதனை நன்கு அறிந்து கொண்டுள்ளன. நாளை (இன்று) ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தினமாகும். ஜனநாயகத்தை பாதுகாக்க விரும்பும் அனைவரும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்றார். |
-
26 ஆக., 2025
www.pungudutivuswiss.com