புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2012


அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல! மதுரை திமுக நிர்வாகிகள் மத்தியில் கலைஞர் பேச்சு!
24.09.2012 அன்று அண்ணா அறிவாலயத்தில் மதுரை மாநகர் மாவட்டக் கழகத் தோழர்கள் மத்தியில் திமுக தலைவர் கலைஞர் பேசுகையில், 

மதுரை மாநகரின் பிரச்சினைகளையெல்லாம் நானும் பொதுச் செயலாளரும், நம்முடைய தலைமைக் கழகத்தின் செயலாளர்களும் இதுவரையிலே கேட்டறிந்து எல்லோருடைய ஒத்துழைப்போடும் - எல்லோருடைய நல்ல உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்த தீர்மானமாக - இனி மதுரையிலே அங்கே புயல், இங்கே புயல், அங்கே கூச்சல், இங்கே குழப்பம் என்ற செய்திகள் வெளிவராத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட நாமெல்லாம் ஒன்றாகப் பணியாற்றுகிறோம், நமக்குள் வேறுபாடு கிடையாது என்ற முடிவினை எடுப்பதற்கு இவ்வளவு நேரம் எல்லோரும் கலந்து பேசி தெரிவித்த கருத்துக்களையெல்லாம் கேட்டறிந்திருக்கிறோம்.

என்னைப்  பொறுத்தவரையில் நம்முடைய பேராசிரியர் அவர்களும், தம்பி துரைமுருகனும் மற்றவர்களும் எடுத்துக் காட்டியதைப்போல தமிழ்நாட்டிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பாசறை - களம் அமைக்கின்ற பாசறை- எதற்கும் துவண்டு விடாத பாசறை ஒன்று உண்டு என்றால், அது மதுரைக் கழகப் பாசறை தான் என்ற  எண்ணத்தோடு இருப்பவன். 
இன்று நேற்றல்ல; மதுரையில் நண்பர் முத்து அவர்களுடைய காலத்திலிருந்து இதுவரையிலே அந்தப் பாசறையின்  மேன்மையைக் காப்பாற்றி வந்திருக்கிறார். முத்து அவர்களே கூட சில மாறுபாடான எண்ணங்களோடு நம்மிடமிருந்து  பிரிந்து எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நம்மை வசை பொழிந்த காலத்திலே கூட என் மீதும், பொதுச் செயலாளர் மீதும், நம்முடைய கழகத்தின் மீதும், அவர் வைத்திருந்த மரியாதையை, மதிப்பை என்றைக்கும் குறைத்துக்  கொண்டவரல்ல.
திராவிட இயக்கம் தமிழ்நாட்டிலே செழித்தோங்க வேண்டும், இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்களில் ஒருவராகத் தான் முத்து விளங்கினார். அவர் எப்படி கட்சியை வளர்த்தார் என்ற அந்தக் காலத்திலிருந்து இன்றைக்கு கட்சியைக் குலைப்பதற்கு யார்; யாருடைய துணையை நாடலாம் என்று எண்ணுகிற இந்தக் காலம் வரையில் நான் அவரையும் அறிவேன், மதுரை மாநகரிலே உள்ள கழக நண்பர்களையும் அறிவேன்.

உங்களில் பலருக்கு நினைவிருக்காது; “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பில் நான் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளைப் படித்தால் அவைகளை நீங்கள் நினைவு கூர்ந்திட முடியும். 

மதுரை மாநகரில் கட்சி வளர்ப்பதற்கு நாங்கள் கையாண்ட முறைகளில் ஒன்று, கொடியேற்றுகின்ற முறை. ஐம்பது கொடிகளை இந்த நாளில் மதுரையில் ஏற்றுவது என்று ஏற்பாடுகள் செய்வோம். அடுத்து திருச்சியில் அன்பில் தர்மலிங்கம் மதுரை முத்துவிற்கு போட்டியாக அறுபது கொடிகளை நாங்கள் ஏற்றுகிறோம் என்று அவர் அறிவிப்பார். இப்படி ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளர்களும் தங்களுடைய மாவட்டத்தில் கொடிகளை ஏற்றுவதற்கு என்னைத் தான் அழைப்பார்கள். 

நான் சென்று கொடிகளை ஏற்றி வைத்திருக்கிறேன். மதுரையைப் பொறுத்தவரையில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு முறை இந்தக் கொடியேற்று விழாவிற்காக - அதை உற்சவமாக மதுரை முத்து நடத்திய அந்தக் காலக் கட்டத்தில் நான் கொடிகளை ஏற்றிக் கொண்டே செல்ல, எதிரிகள் அந்தக் கொடிகளை பின்னாலேயே வந்து அந்தக் கொடிகளை அறுத்து; அந்தக் கொடி மரத்தையே வெட்டி - மரத்தை வெட்டுவது மாத்திரமல்ல; அந்தப் பகுதியிலே கொடிகளை ஏற்றக் காரணமாக இருந்த கழகத் தொண்டனையும் வெட்டி - இப்படி ரத்தம் சிந்திய கொடியேற்று விழாக்கள் பல நடைபெற்றிருக்கின்றன. 

அப்போதெல்லாம் துணிந்து மதுரைக்கு வருகிற பேச்சாளர்களில் ஒருவனாக, பிரசாரகர்களில் ஒருவனாக நான் இருந்தேன். அந்தக் காலந்தொட்டு மதுரையிலே ஒரு சிறிய மாடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் திறக்கப்பட்டு, அதிலே பணியாற்றிய அந்தக் காலத்திலிருந்து இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் உங்களை யெல்லாம் சந்திக்கின்ற இந்தக் காலம் வரை எந்த நேரத்திலும் பிரமாதமாக வரவேற்பு - பிரமாண்டமாக வரவேற்பு - ரெயிலடியில் அல்லது நான் வந்து இறங்குகின்ற விமான நிலையத்தில் வரவேற்பு என்றெல்லாம் வரவேற்றதை நீங்கள் மறந்திருக்க முடியாது. 

அப்படிப்பட்ட கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை என்ன? நம்மை நாமே திருத்திக் கொண்டாலும் கூட, எதிரிகள் திட்டமிட்டு அந்த அளவுக்குப் பணியாற்றுகிறார்கள். பார்ப்பணியம்; அது நம்மையும் வாழ விடாது; அதே நேரத்திலே நமக்கு துணை வருகிறவர்களையும் நம்மை நெருங்க விடாது. அப்படிப்பட்ட பார்ப்பணியத்தினுடைய பயங்கரமான சூழ்ச்சியால் இன்றைக்கு பத்திரிகை உலகமே, அனைத்தும் அல்ல, முக்கால் பகுதி நமக்கு எதிராக இருக்கின்ற காரணத்தால் நம்மை அடக்கிவொடுக்கி அழித்து விட எண்ணுகிறார் கள். உதாரணமாக இன்றைக்கு நாம் இங்கே கூடியிருக்கிறோம். நாளைக்கு இதைப்பற்றி என்ன செய்தி வெளியிடுவார்கள் என்று கற்பனை செய்து பார்த்தால், கருணாநிதியும், பொன். முத்துராமலிங்கமும் கட்டிப் புரண்டார்கள் - நாங்கள் கட்டிப் புரண்டது ஒற்றுமையாகக் கூட இருக்கலாம், ஆனால் நாங்கள் கட்டிப் புரண்டது சண்டையாக என்று செய்திகளை வெளியிடுவார்கள். இரண்டு பேர் கிடைத்தால் போதும், அதை வைத்துக் கொண்டு மதுரை பிரச்சினை குறித்து கருணாநிதியும், அன்பழகனும் இன்று அண்ணா அறிவாலயத்திலே கூட்டம் நடத்தினார்கள். அது கலாட்டாவில் முடிந்து விட்டது என்று அந்தப் பத்திரிகைகளில் செய்தி போடுவார்கள். திடீர் என்று உங்களில் சிலரை அழைத்திருக்கிறோம், நீங்கள் வந்து கலந்து கொண்டிருக்கிறீர்கள். வெளியே போகிறீர்கள். ஆனால் இதைக் கூட ஒரு செய்தியாக இட்டுக் கட்சி நாளைக்கு வெளியிடுவார்கள். இவைகள் எல்லாம் எதிர்காலத்தில் அடங்க வேண்டுமென்றால் இந்தச் செய்திகளில் உண்மை கிடையாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். 

மதுரையில் இருந்த பனி மூட்டம் மறைந்து உதய சூரியன் புதிய வேகத்தோடு கிளம்பியது என்ற நிலை ஏற்பட வேண்டும். என்ன முடிவெடுப்பது என்பதைப் பற்றி - அது எந்த முடிவாக இருந்தாலும் தலைமை எடுத்த முடிவு அது. அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல. இருவரும் திராவிட முன்னேற்றக் கழகம் தான். இருவரும் கட்சி ரீதியாக தங்களை தி.மு. கழகத்தில் ஒப்படைத்துக் கொண்டவர்கள் தான். இங்கே பேசும்போது சிலர் சொன்னார்கள். தி.மு. கழகக் குடும்பத்திற்கு யாரும் துரோகம் செய்யக் கூடாது என்றார்கள்.
அப்படிச் செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்த நம்பிக்கை நாளும் வளரும், நாளும் தொடரும் என்ற நம்பிக்கை நலிந்து போகாது, நாசமாகாது என்ற அந்த உறுதியோடு உங்களை யெல்லாம் வழியனுப்பி வைக்கிறேன். இவ்வாறு பேசினார்.

ad

ad