விஷமிகள் பரப்பிய வதந்தியை நம்ப வேண்டாம்: கலைஞர் பேட்டி
கேள்வி:- இன்று காலையிலிருந்து தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தொலைபேசி மூலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களே?
பதில்:- இன்று காலையிலிருந்து சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை பற்றி இந்த வதந்திகளை உருவாக்கி இருக்கிறார்கள். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி:- காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து அடம் பிடித்து வருகிறதே?
பதில்:- ஒரு மாநில அரசைப் பற்றி அவசரப்பட்டு நான் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. நீண்ட நாட்களாக நான், தமிழகமும், கர்நாடகமும் அண்டை மாநிலங்கள் இந்த இரண்டு மாநிலங்களும் நட்புணர்வோடு இருக்க வேண்டுமே அல்லாமல், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பவன்.
எனவே உங்கள் கேள்வியின் மூலமாக தமிழக அரசையோ, கர்நாடக அரசையோ நான் இந்தப் பிரச்சினையில் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஏற்கனவே காவிரி நதி பாய்கின்ற பகுதிகளில் உள்ள மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசின் உதவியோடு உருவாக்கியது காவிரி நதி நீர் ஆணையம். அந்த ஆணைத்திற்கு கட்டுப்பட்டுத் தான் காவிரி பாய்கின்ற பகுதிகளிலே உள்ள மாநிலங்கள் எல்லாம் நடக்க வேண்டும். இது அப்போதே எடுத்த முடிவு. அந்த முடிவினை தக்கக் காரணங்கள் இல்லாமல் யாரும் மீறக் கூடாது என்பது என்னுடைய கண்டிப்பான கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.