இலங்கை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால், தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகள், சித்ரவதைகளை அம்பலப்படுத்தும் அறிக்கை, லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்ரவதைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை மனித உரிமை கண்காணிப்பு குழு லண்டனில் இன்று வெளியிட்டது.
இக்குழுவின் ஆசிய பிரிவு இயக்குனர் பிராட் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள 141 பக்க அறிக்கையில், தமிழ்ப் பெண்கள் மற்றும் ஆண்கள் சந்தித்த அடக்குமுறைகள் மற்றும் கொடுமைகள் குறித்த வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2006 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிராட் ஆடம்ஸ், இவர்கள் அனைவரும் சித்ரவதைக் கூடங்கள், அல்லது ரகசிய விசாரணை மையங்களில் இருந்த போது பாதிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களும் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.