நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் 286 புதிய விண்ணப்பங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனவர் தொடர்பிலான சாட்சியப்பதிவுகள் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் முடிவடைந்துள்ளது.
அதன்படி 4 கிராமசேவகர் பிரிவில் இருந்தும் 52 பேர் அழைக்கப்பட்டிருந்த வேளை 30 பேர் தமது சாட்சியங்களை வழங்கினர். மேலும் காணாமல் போனதாக 286 பேர் புதிய விண்ணப்பங்களை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.
எனினும் இவர்களுக்கான விசாரணைகள் விரைவில் நடாத்தப்படும் என்றும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 14ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சாட்சியப்பதிவுகளில் 49 பேர் சாட்சியம் அளித்ததுடன் 93 பேர் புதிதாகவும் விண்ணங்களை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.
மேலும் நேற்று முன்தினம் சாவகச்சேரி பிரதேச செயலகர் பிரிவில் 59 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் 44 பேர் சாட்சியம் அளித்ததுடன் 170பேர் புதிய விண்ணப்பங்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.