புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த மரண தண்டனையை குறைக்க கோரி 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள்.
ஜனாதிபதி பதவிக்கு வந்தவர்கள் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 13 ஆண்டுகளாக அந்த கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதாலும், கடந்த 23 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதாலும் தங்களது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில், “ஏற்கனவே கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதால் 15 பேர் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நடைமுறையில் தங்கள் தண்டனையையும் குறைக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 3 பேரின் மனுக்கள் மீதான விசாரணையை நடத்தியது.
அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் குலாம் இ.வாகனவதி, சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரது வாதத்தை ஏற்கவில்லை என்பது இன்று உறுதியானது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீதிமன்றின் அறிவுறுத்தலால் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு கயிறை நெருங்கிய முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் அடுத்தக்கட்டமாக விடுதலை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது தமிழ் உணர்வாளர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகளுக்கும் அதற்காக போராடிய அனைவருக்கும் பேரறிவாளனின் தாய் நன்றி தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை பேரறிவாளன் தாய் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர். சென்னை கோயம்பேட்டில் பட்டாசு வெடித்து பேரறிவாளன் உறவினர்கள் கொண்டாடினர்.
இதேவேளை,தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட தகவல் வேலூர் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்கள் நேற்று இரவு முதலே அவர்கள் தீர்ப்பு குறித்து பதட்டத்துடன் இருந்துள்ளனர்.
மேலும் சிறை வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பேரறிவாளன் நீண்ட நேரம் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. தீர்ப்பு குறித்து தகவலறிந்த சக கைதிகள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினி தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததுடன் ஆனந்த் கண்ணீர் விட்டுள்ளார். அவர் பெண்கள் சிறையில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோரது உறவினர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்.
சிறை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் வேலூர் சிறை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

ad

ad