
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது – பான் கீ மூன்
இலங்கையில் குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜெனீவாவில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆக்கபூர்வமான வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக், நியூயோர்க்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான முறையில் பங்களிப்பினை வழங்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்