சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (36). என்ஜினீயரான இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். க
இந்த நிலையில் சீனிவாசன் சென்னையை சேர்ந்த அபிநயாவை திருமணம் செய்து திருமங்கலத்தில் குடும்பம் நடத்தி வந்தார். சீனிவாசன் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இது அபிநயாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்த பழைய போட்டோக்களை அவர் பார்த்தபோது, சீனிவாசனுடன் மேலும் 2 பெண்கள் திருமண கோலத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிநயா, இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் சீனிவாசனை பிடித்து விசாரித்தபோது கோவையை சேர்ந்த டாக்டர் சுமித்ரா, கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயா பிரின்ஸ் ஆகிய மேலும் 2 பேரையும் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது.
அவர்களை அந்தந்த ஊரிலேயே வீடு எடுத்து சீனிவாசன் தங்க வைத்து உள்ளார். வாரம் இரண்டு முறை அவர்களது வீட்டுக்கு சென்று சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டுள்ளார். அவர்கள் சந்தேகம் அடைந்து கேட்கும் போது வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டதாக சமாளித்து வந்துள்ளார். இதனால் சென்னை, கோவை, கன்னியாகுமரி என சீனிவாசன் ஜாலியாக வாழ்க்கை நடத்தி இருக்கிறார். ஏமாந்த டாக்டர் சுமித்ரா உள்பட 3 பேரும் ஏற்கனவே கணவருடன் விவாகரத்து பெற்றவர்கள். அனைவரையும் திருமண இணையதளம் மூலமே வலை விரித்து வீழ்த்தி உள்ளார் சீனிவாசன். ஊனமுற்ற மகனுடன் வாழ்ந்து வருவதாக சீனிவாசன் கூறியதால் நல்லவராக இருக்கலாம் என்று நினைத்து பரிதாபப்பட்டு அவரை திருமணம் செய்ததாக ஏமாந்த பெண்கள் கூறியுள்ளனர்.
சீனிவாசன் திருமணம் ஆனதுமே அபிநயாவின் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் அவரது பெயரில் இருந்த ஒன்றரை கோடி மதிப்புள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளார். இதேபோல் கோவை டாக்டர் சுமித்ராவின் ரூ.90 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளார். அவர்களது நகைகளையும் வாங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
கல்யாண மன்னன் சீனிவாசன் குறித்து கோவையில் உள்ள டாக்டர் சுமித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் சென்னை விரைந்துள்ளார். கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயாபிரின்ஸ் வேலை சம்பந்தமாக துபாய் சென்று விட்டார். அவர் ஏமாந்து இருப்பது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ஜினீயர் சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வேறு பெண்கள் யாரும் ஏமாந்து உள்ளார்களா என்பது தொடர்பாக சீனிவாசனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.