யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நாளை மூன்று கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியனவே நாளை தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
எட்டாவது நாடாளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றது. இதுவரையில் முக்கிய கட்சிகள் எவையும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை.தென்னிலங்கை கட்சி ஒன்று மட்டுமே யாழ்ப்பாணத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. நாளை பிரதான கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கு- கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது. யாழ்.தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு யாழ்.மாவட்டச் செயலகத்திலும்,வன்னித் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்பு மனு வவுனியா மாவட்டச் செயலகத்திலும் பி.ப.2.30 மணிக்கு கையளிக்கப்படவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நாளை பி.ப 1.30 மணிக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளது.அதேபோல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளது