பீகாரைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் மெகா கூட்டணி அமைக்க எதிர்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன
. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஆளும் சமாஜ்வாடி ஆகியவை மெகா கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தன. இந்த சூழலில் நிதிஷ் பதவியேற்பு விழாவில் எதிர்பார்க்கப்பட்ட அளவில் சமாஜ்வாடி தலைவர் முலாயம் மற்றும் அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் கலந்து கொள்ளவில்லை. இதனால் உத்தரபிரதேசத்தில் மெகா கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் பீகாரைப் போல உத்தரபிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.இ்தையொட்டி உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம் டெல்லியல் உள்ள இமாச்சல் பவனில் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தனது பலத்தை காட்டும் வகையில் தனித்து போட்டியிட வேண்டும் என தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பின்னர் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் நிருபர்களிடம் கூறுகையில், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தலைவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் போதிய கால அவகாசம் இருப்பதால் இதுகுறித்து மேலிடம் பரிசீலித்து முடிவுகள் எட்டப்படும் என்றார். இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நிர்மல் காத்ரி, மாநில பொது செயலாளர் மதுசூதன் மிஸ்த்ரி மற்றும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித், பி.எல்.புனியா, ஆர்.பி.என்.சிங், ரீட்டா பகுகுணா ஜோஷி, ராஜிவ் சுக்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.