புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

இதுதான் இந்தியா.. பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள்

 சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி
கோயிலுக்கு, யுகாதி தினத்தன்று, முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளதாம்.
இந்த கோயில், தேவுனி கடப்பா என்ற பெயரால் பிரபலமாக உள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினமான நேற்று, பெருவாரியான முஸ்லிம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது.
பர்தா அணிந்தபடி பல முஸ்லிம் பெண்கள் வந்திருந்தனர். கணிசமான முஸ்லிம் ஆண்களும் வந்திருந்தனர். பக்தர்கள் வரிசையில் நான்கில் ஒரு பங்கினர் முஸ்லிம்கள்தான் என்று கூறும் அளவுக்கு அவர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
முஸ்லிம் பெண்கள் கைகளில் பூக்கள், வெல்லம், கரும்பு துண்டுகள், மஞ்சள் மற்றும் வேப்பம்பழம் போன்றவற்றை எடுத்து வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் முஸ்லிம் பெண்களும், ஆண்களும், சுவாமி தரிசனத்திற்காக காத்து நின்றிருந்ததை பார்க்க முடிந்தது.
ஆந்திராவின் ராயலசீமா மண்டலத்தில் இருந்து அதிகப்படியான சிறுபான்மை மதத்தினர் இக்கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.
லட்சுமி நாராயணா என்ற சமூக ஆர்வலர் இதுபற்றி கூறுகையில், 'சகிப்பின்மை குறித்த விவாதங்கள் நாட்டில் எதிரொலிக்கும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற சமய நல்லிணக்க செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இதே கடப்பா நகரிலுள்ள 'பெத்த' (பெரிய) தர்க்காவுக்கு, முஸ்லிம்கள் மட்டுமின்றி, இந்துக்களும் பெரும்பான்மையாக சென்று வழிபாடு செய்கிறார்கள்' என்றார்.
கடப்பா லட்சுமி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதை தொடர்ந்து, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தங்களது ஆன்மீக பயணத்தை நிறைவு செய்வது வழக்கமாம். முஸ்லிம்கள் அதிக அளவில் கடப்பா கோயிலுக்கு வர நீண்ட நெடிய வரலாற்று காரணங்கள் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள். சபாஷ்.. இதுதான் இந்தியா.

ad

ad