புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


கூடங்குளம் சம்பவம்: தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மறியல்



கோவை காந்திபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர்.
சென்னை, செப். 11: கூடங்குளத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென் மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில்...: கூடங்குளம் பகுதி அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற மறியல், ஆர்ப்பாட்டங்களில் 171 பேர் கைது செய்யப்பட்டனர். மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டங்களில் தனித்தனியே ஈடுபட்டு கைதாகினர்.
கோவையில்...: கோவையில் காந்திபுரத்தில் மதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில்...: மதுரையில் ரயிலை மறிக்க முயற்சித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்பட 76 கைது செய்யப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.
தல்லாகுளம் பகுதியில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமை வகித்தார். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஊர்வலமாகச் சென்றனர்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருவைகுளத்தில் இருந்து பெரியதாழை வரையிலான 11 கடலோர
கிராமங்களிலுள்ள 2,100 நாட்டுப் படகுகள், 300 விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
கடலோர பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பில், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மீனவர்கள் போராட்டம் காரணமாக, தூத்துக்குடியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடியில் மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரியில் உண்ணாவிரதம்: கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2-வது நாளாக மீனவர்கள் செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, மேலமணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து கூடங்குளம் வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர்.
சென்னையில் மறியல்: கூடங்குளம் பகுதி மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மதிமுக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் 2 பஸ்கள் மீது கற்களை வீசினர். அதில், அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.
இதேபோன்று, கோயம்பேடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில், எழும்பூர் ரயில் நிலையம் பின்புறம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மறியலில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
திண்டிவனம், கரூர்: திண்டிவனத்தில் தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கரூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ad

ad