ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கூதாம்பியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). அவினாசியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் மகேஸ்வரி (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் வேதனை அடைந்த மகேஷ்வரி தனது 11 மாத பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட மகேஷ்வரி முன்னதாக தனது டைரியில் எழுதி வைத்திருந்ததாவது:-
என் குழந்தைக்கு கவுசிகா என பெயர் வைக்க நான் விரும்பினேன். ஆனால் அவரோ (கணவர்) கவிசா என பெயர் வைக்க வேண்டும் என்றார். அதன்படி கவிசா என பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக கணவருடன் எனக்கு தொடர்ந்து பிரச்சினை தகராறு ஏற்பட்டது. அப்போது நீ குழந்தை பெயரை மாற்றினால் நான் தற்கொலை செய்வேன் என்று என் கணவர் கூறினார்.
இதனால் என் கணவர் சாவதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே நானே குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த டைரியில் எழுதப்பட்டிருந்தது.
குழந்தைக்கு பெயர் வைப்பதில் ஏற்பட்ட ஒரு சாதாரண தகராறு இவ்வளவு விபரீதமாகும் என உறவினர்கள்- அக்கம் பக்கத்தினர் யாரும் நினைக்கவில்லை.