இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்களால் போராடி வெற்றிபெற்றுள்ளது.
இன்று ராஜகோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பாக ஆரம்ப வீரர்களாக களமிறங்கி குக் மற்றும் பெல் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 158 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். இதில் இயன் பெல் ஒரு ஆறு ஓட்டங்கள் மற்றும் 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 85 ஓட்டங்களுடன் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்ததுடன் அணியின் தலைவர் குக் 75 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பீற்றர்சென் (44), மோர்கன் (41) அணிக்கு பலம் சேர்த்து ஆட்டமிழக்க கீஸ்வெட்டர் (24) மற்றும் பட்டேல் (44) இணைந்துகொண்டர்கள். இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதிநேரத்தில் அதிரடியாக ஆடி 70 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அசோக் டிண்டா 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
326 என்ற பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 316 ஓட்டங்களைப் பெற்று 9 ஓட்டங்களால் போராடி தோல்வியுற்றது.
இந்திய அணி சார்பாக ஆரம்வீரர்களாக களமிறங்கிய ரஹானே (47), கம்பீர் (52) சிறப்பான இணைப்பாட்டத்தினை ஏற்படுத்தி 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். தொடர்ந்து ரெய்னா (50) மற்றும் யுவராஜ் (61) இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தபோதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.
இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ட்ரட்வெல் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் ட்ரட்வெல் தெரிவுசெய்யப்பட்டார். ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியினை வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என்ற ரீதியில் தொடரில் முன்னிலை வகிக்கின்றது.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடர் ஆகியவற்றை ஏற்கனவே இந்தியா இழந்தமை குறிப்பிடத்தக்கது.