பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கிறார் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக அளித்த வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினரான பியசேன இன்று கூட்டமைப்பு பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது. முடிந்தால் கூட்டமைப்பிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு
தேர்தல் கேட்டு எம்.பி. யாகட்டும் பார்க்கலாம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.காரைதீவு 2003 உயர்தரப்பிரிவு சமூக அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் தலைவர் அருளானந்தம் வாகீசன் தலைமையில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வைபவத்தில் காரைதீவு பிரதேச சபை உபதவிசாளர் கே.தட்சணாமூர்த்தி, மனித உரிமைகள் இல்ல அக்கரைப்பற்று பொறுப்பாளர் நிசாந்தினி ஆகியோர் கெளரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
தமிழ் மக்களின் பிச்சையில் பாராளுமன்றம் சென்ற அவர் இன்று தான் எம்.பி.யாக காரணமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதும் மூத்த எம்.பி.க்களை சாடுவதும் கண்டனத்துக்குரியது.
நாம் யாரையும் காட்டிக் கொடுத்தும் வரவில்லை. அப்படியொரு தேவையும் எமக்கில்லை. அந்த எட்டப்பன் வாழ்க்கையைவிட நாம் சாகலாம். தமிழ்த் தேசியத்திற்காக உயிரைக் கொடுத்த தமிழர் பரம்பரையில் வந்தவர்கள் நாம் எனவே, எம்மைப்பற்றி பேச அவருக்கு உரிமையோ, அருகதையோ இல்லை என்றார்.
இந்நிகழ்வில் கலைமகள் பாலர் பாடசாலை மாணவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் அமைப்பின் மூன்று வருட சேவையை யொட்டி மீள்பார்வை என்ற நூல் வெளியீட்டு விழாவும் காணொளியும் வெளியிட்டு வைக்கப் பட்டன.
Close