புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013


            ""ஹலோ தலைவரே... ரொம்பவே எதிர்பார்க் கப்பட்ட தி.மு.க பொதுக்குழுவில் எடுக் கப்பட்ட முடிவுகளைக் கவனிச்சீங்களா?''

""தீர்மானங்களையும் கவனிச்சேன்.. அதற்கப்புறம் கலைஞர் பேசியதையும் கவனிச்சேம்ப்பா.''
.

""பொதுக்குழு உறுப்பினர்களெல்லாம் கலைஞர் தங்களோட மனநிலையை வெளிப் படுத்துறாருங்கிற சந்தோஷத்தில் அவரோட பேச்சுக்கு பலமா கைதட்டுனாங்க. தி.மு.க இந்த தேர்தலில் தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப் படுத்துகின்ற, நன்றி மறந்து செயல்படுகின்ற காங்கிரசோடு கூட்டணி கிடையாது என்று கலைஞர் சொல்லச் சொல்ல ஒவ்வொரு வார்த்தைக்கும் பொதுக்குழு உறுப்பினர் கள் கைதட்டிக்கிட்டே இருந்தாங்க.  இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலிலும் தி.மு.கவை ஏமாற்றிக் கொண்டிருக்கிற காங்கிரசோடு கூட்டணி சேருவோம்னு எதிர்பார்க்காதீங்கன்னு கலைஞர் சொன்னபோதும் கைதட்டல் பலமா இருந்தது.''

""பா.ஜ.க தலைமை பற்றியும் கலைஞர் விமர் சித்துப் பேசியிருக்காரே?''

""ஆமாங்க தலைவரே.. ..வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் இருந்த அந்த காலத்திலே நாம் பா.ஜ.க. வோடு கைகுலுக்கினோம். மனிதாபிமானமில்லாமல் நடந்துகொண்ட அத் வானி போன்ற தலைவர் கள் உள்ள பா.ஜ.கவுடன் அல்ல. அந்த வரலாறு நம்மைப் பொறுத்தவரை யில் முடிந்துவிட்டதுன்னு சொன்னவர், நரேந்திர மோடிக்காக கார்ப்பரேட் நிறுவனங் களும் ஊடகங்களும் தரும் விளம்பரங் களை இங்குள்ள முதலமைச்சருக்குத் தரும் விளம்பரத்தோடு எண்ணிப் பார்க்கணும்னும் சொன்னார். அதாவது, பா.ஜ.கவோடு கூட்டணி வைக்கலாம்னு பேசியவர்களுக்கு கலைஞர் கொடுத்த பதில் இது. பா.ஜ.க பற்றி கலைஞர் பேசியதற்கும் அரங்கத்தில் வரவேற்பு.''

""கலைஞரின் பேச்சு கட்சியினர் கிட்டே என்ன தாக்கத்தை உண்டாக்கி யிருக்குது?''

""கலைஞர் பொளந்துகட்டிட்டாருன்னு பொதுக்குழு முடிந்து கிளம் பிய உறுப்பினர்கள் வெளியில் பேசிக் கிட்டதை கேட்டேங்க தலைவரே.. எந்தக் கட்சியும் வேண்டாம்… இருக்கிற கட்சி களோடு களத்தை சந்திக்கலாம்னு இந்த வயதிலும் ரிஸ்க் எடுக்கிற தலைவர் இருக்கும்போது நாம எவ்வளவு வேகமா செயல்படணும்னு பேசிக்கிட்டாங்க.  அதேநேரத்தில், கலைஞர் பேசும்போது மேடையில் உட்கார்ந்திருந்த அவரது மகனும் தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் உள்பட எல்லா நிர்வாகி களுக்கும் அந்தப் பேச்சு பயங்கர அதிர்ச்சியா இருந்தது.''

""ஏன்?''

""கூட்டணி குறித்து ஆலோசிக்க ஒரு குழு அமைக்கப்படும்னும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கலைஞருக்கும் பேராசிரியருக்கும் வழங்கப்படும்னு தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு நாளா ஆலோசித்து எழுதப் பட்ட இந்த தீர்மானத்தை ஸ்டாலின் தான் வாசிச்சாரு. ஆனா, அவருக்கே கலைஞர் இப்படி கூட்டணி பற்றி அறி விப்பார்னு தெரியாது. மதிய சாப்பாட்டுக் காக வீட்டுக்குப் போன கலைஞர் வழக்கமா 20 நிமிடம் ரெஸ்ட் எடுப்பாரு. ஆனா, அன்னைக்கு அவர் தூங்கலை. யோசனையிலேதான் இருந்திருக்காரு. பொதுக்குழுவில் பேசிய பலரும் காங்கிரசை துவைத்துக் காயப்போட்டது அவர் மனசிலேயே இருந்திருக்குது. அதைத்தான் மாலையில் மீண்டும் மேடைக்கு வந்ததும் கொட்டிட்டாரு.'' 

""காங்கிரஸ் மீதான கோபத்தைத் தான் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிலிருந்து தி.மு.க விலகுவதற்கு முதல்நாள் தன்னை சந்திக்க வந்த ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர்கிட்டே கலைஞர் கொட்டினாரே?''

""அதே வேகம்தான் இப்பவும்.… அப்ப, ஈழப்பிரச்சினை தொடர்பாகவும் 2ஜி தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர்கள்கிட்டே கலைஞர் கோபப்பட்டப்ப, மேலிடத்தில் பேசிட்டு சொல்றோம்.. அவசரப்பட வேணாம்னு அவங்க சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, கலைஞரின் கோபம் தீரலை. அன்னைக்கு நைட்டு, கோபாலபுரம் வீட்டில் உதவிக்கு யாரும் இல்லாத நிலையிலும் அவரே உட்கார்ந்து நோட்ஸ் எழுதி, மறுநாள் காலையில் சண்முகநாதன் வந்ததும் அதை டைப் பண்ணச்சொல்லி, கட்சி நிர்வாகிகளுக்குக்கூட கடைசிவரை தெரியாமல் வைத்திருந்து, பிரஸ்ஸைக் கூட்டி, கூட்டணியிலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் விலகுவதா அறிவிச்சாரு. அதேமாதிரிதான் இப்பவும், ஸ்டாலின் உள்பட யாருக்கும் தெரிவிக்காமல், கூட்டணி பற்றிய தன்னோட எண்ணங்களை மேடையில் படபடன்னு கொட்டித் தீர்த்துட்டாரு கலைஞர்.'' 

""அவரோட மனநிலைதானே தி.மு.க தொண்டர்களுக்கும்… .. சி.பி.ஐ. ரெய்டு, கனிமொழிக்கு ஜெயில். கோபாலபுரம் வீட்டிலேயே தயாளு அம்மாகிட்டே நடந்த விசாரணை. இதெல்லாம் தி.மு.க.வினருக்கு காங்கிரஸ் மேலே செம கோபத்தை உண்டாக்கியிருந் திச்சி. அதை கரெக்ட்டா புரிஞ்சிருந்த கலைஞர், பொதுக்குழுவில் போட்டுத் தாக்கிட்டாரு. காங்கிரசும் இல்லாமல், பா.ஜ.க.வும் இல்லாம எம்.பி. தேர்தலை எப்படி சந்திக்க முடியும்னு தி.மு.க.வில் சிலருக்குத் தயக்கம் இருக்குது. நம்பிக்கை உள்ளவங்க கணக்கு சொல்றாங்க.''

""என்ன கணக்கு?''

""தி.மு.க.வோடு இப்ப விடுதலைசிறுத்தை கள், ம.ம.க., புதிய தமிழகம் இந்த மூன்று கட்சி களும் இருக்குது. அ.தி.மு.க அணியில் இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் இருக்குது. பெரிய கட்சிகள் எந்தப் பக்கமும் இல்லை. அதனால தி.மு.க தரப்பும் அ.தி.மு.க தரப்பும் சமபலத்தோடுதான் களத்தை சந்திக்கும்னு நம் பிக்கை உள்ளவங்க சொல் றாங்க. ஆளுங்கட்சியா இருப்பது அ.தி.மு.க.வுக்குத் தேர்தல் களத்தில் குறிப் பிட்ட சதவீத ஆதரவை அதிகரிக்கும். அதேநேரத் தில், ஆளுங்கட்சி மேலே மக்க ளுக்கு உள்ள அதிருப்தி தி.மு.க. வுக்கு சாதகமாகி அதன் ஓட்டு சத வீதத்தை அதிகரிக்கும்னும் கணக்கு போடப் படுது. கணக்கு எப்படி இருந்தாலும், கூட்டணி இல்லைங்கிறதில் தி.மு.க. மா.செ.க்கள் பலருக்கும் சந்தோ ஷத்தைக் கொடுத்திருக்குது.''

""அவங்களுக்கு இதில் என்ன ஸ்பெஷல் சந்தோஷம்?''

""எம்.பி. தேர்தலைவிட எம்.எல்.ஏ தேர்தல்தான் நமக்கு முக்கியம்ங்கிறது மா.செ.க்களோட மனநிலை. ஏன்னா, பெரும்பாலான மா.செக்கள் சட்டமன்றத் தேர்தலில்தான் போட்டியிடுவாங்க. எம்.பி. தேர்தலில் யாரையாவது ஜெயிக்க வச்சி, அவங்களுக்கு டெல்லியில் செல்வாக்கு வளர்வதை இவங்க விரும்பலை. அதனால தனித்தே நிற்கிறதுதான் சரின்னு நினைக்கிறாங்க. இதைப் பொதுக்குழு கூடுறதுக்கு முன்னாடியே தங்கள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்கிட்டே சொல்லி, பேச சான்ஸ் கிடைச்சா, கூட்டணி வேண்டாம்னு சொல்லுங்கன்னு வலியுறுத்தியிருக்காங்க.'' 

""கூட்டணி இல்லைங்கிறதால தி.மு.க உறுப்பினர்கள் தங்களுக்குள் தனித்தனி அணி அமைச்சிடக்கூடாதுன்னு கலைஞர் பேசுனதுக்கு காரணம் இதுதானா? சரி, கூட்டணி இல்லைன்னு கலைஞர் அறிவிச்சதுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ரியாக்ட் பண்ணியிருக்காரே.… நாங்களா ஆதரவு கேட்டு லெட்டர் கொடுத்தோம், கூட்டணி தொடருதுன்னு நாங்க சொன்னோமான்னு கேட்டதோடு, கனிமொழி தன்னோட எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதா தகவல் வருது. அப்படி செய்தால் நல்லதுன்னும் சொல்லியிருக்காரே.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் காங்கிரசுக்கு வெயிட் குறைஞ்சுதுன்னு சொல்லியிருக்காரே..''

""மேலிடத்தில் கேட்டுட்டுத்தான் அவங்க இப்படி சொன்னதா சத்ய மூர்த்திபவன் வட்டாரத்தில் சொல்றாங்க. ஆனா, காங்கிரஸ் மேலிடத்தைப் பொறுத்தவரை, தி.மு.க.வுடன் கூட்டணி இருந்தாதான் தமிழகத்தில் நம்மால ஜெயிக்க முடியும்னும், இரண்டு முறையா தமிழகத்தில் கிடைச்ச வெற்றிதான் மத்தியில் ஆட்சியமைக்க உதவி செஞ்சதுன்னும் ப.சி. சொல்லி யிருக்காரு. அதனால எப்படியும் தி.மு.க.வை மறுபடியும் காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வரணும்ங்கிற ப்ளான் டெல்லியில் போடப்பட்டிருக்குது.''

""ப்ளானா?''

""ஆமாங்க தலைவரே.. பார்லிமெண்ட் சென்ட்ரல் ஹாலில் திங்கட்கிழமையன்னைக்கு தி.மு.க எம்.பி.க்கள்கிட்டே பேசிய காங்கிரஸ் மந்திரிகளும் எம்.பி.க்களும், 2ஜியில் நீங்க பாதிக்கப்பட்டது உண்மைதான். கேஸ்தான் கிட்டதட்ட முடிவுக்கு வந்திடிச்சே.. கனிமொழிக்கும் கலைஞர் டி.வி நிர்வாகம் எடுத்த முடிவுக்கும் சம்பந்தமில்லைன்னு கோர்ட்டில் சொல்லப்பட்டி ருக்குது. கலைஞர் டி.வி.க்கு கடனா கிடைச்ச பணம் லஞ்சப்பணம்ங் கிறதுக்கு எந்த ஆவணமும் இல்லைன் னும் சி.பி.ஐ. தரப்பில் சொல்லப்பட்டிருக்குது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை கொடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்கு பிரதமரும் ஒப்புதல் கொடுத்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியிருக்குது. ஸ்பெக்ட்ரத்தை வாங்கிய நிறுவனம் அதை அதிக விலைக்கு விற்றதற்கு அப்போதைய நிதிமந்திரி ப.சி. ஒப்புதல் கொடுத் திருக்காரு. ராசாவோ அவரோட உறவினர் களோ 2ஜி ஒதுக்கீட்டில் பண ஆதாயம் அடைஞ்சாங்கன்னு எந்த குற்றச்சாட்டும் இல்லை. அதனால 2ஜியில் தி.மு.க தரப்புக்கு எந்த நெருக்கடியும் இல்லைன்னு சொல்லும் காங்கிரஸ் தரப்பு இன்னொரு விஷயத்தையும் சொல்றாங்க.''

""என்ன விஷயம்?''

""2ஜியில் சி.பி.ஐதான் இவ்வளவு நடவடிக் கைகளையும் எடுத்திருக்குது. ப.சி. கண்ட் ரோலில் உள்ள அமலாக்கப்பிரிவு அமுக்கித்தான் வாசிக்குது. அதை வேகப்படுத்தினா தி.மு.க.வுக்கு இன்னும் நெருக்கடி வரும். அதைத் தவிர்க்கப் பாருங்கன்னு சொல்லி, கூட்டணிக்கு காங்கிரஸ் பிளாக்மெயில் பாணியில் நெருக்கடி கொடுக்குது. தி.மு.க தலைமையும் தொண்டர்களும் காங் கிரசோடு மறுபடி கூட்டணி சேரக்கூடாதுங்கிற முடிவில்தான் இப்பவும் இருக்காங்க.''

""தி.மு.க.வின் இந்த முடிவை அ.தி.மு.க எப்படி பார்க்குது?''



""இதைத்தான் அ.தி.மு.க எதிர்பார்த்துக் கிட்டிருந்தது. பலமான கூட்டணி இல்லாமல் தி.மு.க. தேர்தல் களத்துக்கு வந்தால் அது தங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும்னு அ.தி. மு.க ஏற்கனவே கணக்கு போட்டு வைத்திருக் குது. ஜெ. ரொம்ப ஹேப்பி. நமக்கு நல்ல வாய்ப்புன்னு ஜெ. நினைக்கிறாராம். அரசிய லுக்கு வந்து நிறைய இழந்துவிட்டதாகவும், இந்தியாவின் முதன்மைப் பொறுப்பை அடை வதற்கு இதுதான் ஒரே வாய்ப்புன்னும் அவர் சொல்றாராம். 19-ந் தேதி நடக்கும் செயற்குழு- பொதுக்குழுவிலும் இதே குரல்தான் ஒலிக்கு மாம். ஏற்கனவே ரெடி பண்ணிட்டிருந்த பொதுக்குழு பேச்சை மாற்றி அதில் தி.மு.க. அட்டாக்கை அதிகப்படுத்தும் ஜெ., தேர்தல் பணிக்குழுவிலும் மாற்றம் செய்து அறிவிப்பாராம். நாம ஏற்கனவே பேசியபடி, ஜெ.வை பிரதமர் வேட்பாளரா முன்னிறுத்தக்கூடிய கட்சிகளுடன் தான் கூட்டணின்னு அறிவிப்பு வருமாம்.''

""காங்கிரசோடு கூட்டணி இல்லைன்னு சொன்ன தி.மு.க.வை பா.ஜ.க தலைவர்கள் எப்படி பார்க்குறாங்க?''


""தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. வின் கூட்டணிக்கான முதல் சாய்ஸ், அ.தி.மு.க தான். அப்புறம்தான் மற்ற கட்சிகளெல்லாம்!  தி.மு.க.வோடு கூட்டணி அமைத்தால் 5 சீட்டு தான் ஒதுக்குவாங்கன்னும், இத்தனை காலமா அவங்க மேலே சுமத்துன 2ஜி குற்றச்சாட்டைப் பற்றி வடமாநிலங்களில் பேசமுடியாதுன்னும் பா.ஜ.க தலைவர்கள் நினைக்கிறாங்க. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ- பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சந்திப்பைக்கூட அவங்க அடக்கித் தானே வாசிக்கிறாங்க.''

""ஏன்? பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழிசை சவுந்திரராஜனும் அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புன்னுதான் சொல்றாங்க. வைகோ தரப்பிலோ பா.ஜ.க.வுடனான கூட்டணி உறுதியாயிட்ட மகிழ்ச்சி தெரியுதே?''

""பொன்.ராதாவைக் கேட்டால், அதேநாளில் நானும் டெல்லிக்குப் போயிருந்தேன்னும், கூட்டணி விஷயமா பேசி னாங்களான்னு தெரியலைன் னும், பா.ஜ.க.வை நோக்கி வரும் பல கட்சிகளில் ம.தி.மு.க.வும் ஒன்றுன்னு சொல்றாரு. ஆனா, வைகோ வையும் பா.ஜ.க.வையும் ஒரே அணியில் கொண்டுவர முயற்சி எடுத்துவரும் தமிழருவிமணியனோ, பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள் அழைத்துதான் வைகோ டெல்லிக்குப் போனாரு. பா.ஜ.க தலைவர் முரளிதர்ராவ் மூலமாத்தான் ராஜ்நாத்சிங்குடனான சந்திப்பு நடந்தது. இதை இங்குள்ள பா.ஜ.க தலைவர்கள் மறுப்பதற்கு என்ன அவ சியமிருக்குதுன்னு தெரியலைங்கிறார். பா.ம.க.வுட னான கூட்டணி பேச்சுவார்த்தை கனிந்து வருவதாகவும், விஜயகாந்த்தோ தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க அணியில் ஜெ. சேர்வாரோங்கிற சந்தேகத்தில் இருக்கிறார்னும், கட்சி மாநாட்டுக்குப்பிறகு தன்னோட முடிவை அறிவிப்பதா சொல்லியிருக்காருன்னும் ஓப்பனாவே பேட்டி கொடுத்திருக்கிறாரு. வைகோ- விஜயகாந்த்- பா.ஜ.க.ங்கிற கூட்டணியை உருவாக்க தமிழருவி மணியன் முயற்சிப்பதை நம்ம நக்கீரன்தான் போன ஆகஸ்ட் 28-ந் தேதி இதழிலேயே சொன்னது. அதுபோல பா.ம.க.வையும் இதற்குள்ளே கொண்டு வர முயற்சிப்பதையும் நக்கீரன்தான் முதலில் சொன்னது. விஜய காந்த்துக்கு 10% ஓட்டு, வைகோவுக்கு 8%, மோடிக்கு 10%, பா.ம.க.வுக்கு 6%  ஆதரவு இருப்பதால தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இந்தக் கூட்டணி ஜெயிக்கும்ங்கிறது தமிழருவி போடும் கணக்காக இருக்குது.''

""அப்புறம் ஏன் இந்தக் கணக்கை பா.ஜ.க ஒப்புக்கொள்ள மாட்டேங்குதாம்?''

""தலைவரே.. பா.ஜ.க. தலைவர்கள் கணக்கே வேற.… மத்திய பிர தேசத்தில் சவுகான் பதவியேற்பு விழாவில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு தானாகப் போய் கலந்துக் கிட்டாரு. ஆனா, அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி சாய்ஸ், ஜெகன்மோகன் ரெட்டிதான். அது போல, வைகோ டெல்லிவரைக்கும் போய்வந்தாலும் பா.ஜ.க.வின் தமிழக சாய்ஸ் அ.தி.மு.க.தான். ஜெ. பிடி கொடுக்கலைன்னா, தி.மு.க. அதுவும் சரிவரலைன்னா தே.மு.தி.கங்கிறதுதான் அவங்க கூட்டணிக் கணக்கு. வைகோ வாலண்ட்டியரா வந்து வண்டியில ஏறப்பார்க்குறாருன்னு டெல்லி பா.ஜ.க.வினரும் இங்குள்ள பா.ஜ.க. வினரும் சொல்றாங்க.''

""ஆளாளுக்கு ஒரு வண்டியிலே ஏறுறாங்க.. தே.மு.தி.கவிலிருந்து விலகி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த வண்டியில் ஏறப்போறாராம்?''

""நான் சொல்றேன்.. பண்ருட்டி ராமச்சந்திரன் இப்ப போன்கால்களை அட்டெண்ட் பண்ணுவதேயில்லை. காரணம், தே.மு.தி.க. தரப்பிலிருந்து போன் பண்ணி கன்னாபின்னான்னு திட்டுறாங் களாம். அவரை ஓ.பி.எஸ். சந்திச்சுப் பேசியிருக்கிறார். தே.மு.தி.கவிலிருந்து மாவட்டச் செயலாளர்கள் விலகத் தயாரா இருப்பதா பண்ருட்டியார் சொல்லியிருக்காரு. பண்ருட்டியாரை எப்படி பயன்படுத்திக்கிறதுன்னு விரைவில் தகவல் சொல்றேன்னு ஜெ. சொன்னதா ஓ.பி.எஸ். சொல்லி யிருக்காரு. மாற்றத்தை எதிர் பார்த்து காத்திருக்காரு பண்ருட்டி ராமச்சந்திரன்.''


 லாஸ்ட் புல்லட்!

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று எம்.பி. பதவியை இழந்த லாலுபிரசாத் யாதவ், ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார். திங்களன்று வெளியே வந்த அவர், தன் மீது சி.பி.ஐ தவறான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறதென்றும் நீதியை மதித்து நடப்பேன் என்றும் சொல்லியுள்ள லாலு, எத்தனை மோடிகள் வந்தாலும் மத்தியில் மதவாத அரசை அமைக்க விடமாட்டேன் எனத் தனக்கேயுரிய பாணியில் சவால் விட்டிருக்கிறார். ரதயாத்திரையை தடுத்துநிறுத்தி அத்வானியையே கைது செய்தவ ராயிற்றே!

போலி கம்பெனியிடம் பணம் பெற்றுக் கொண்டு சிபாரிசு கடிதம் கொடுத்து வீடியோவில் சிக்கிய அ.தி.மு.க எம்.பிக்கள் தென்சென்னை சிட்லபாக்கம் ராஜேந்திரன், பொள்ளாச்சி சுகுமார் இருவரைப் பற்றியும் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜெ. அவர்கள் மீதான குற்றச்சாட்டும் வீடியோ ஆதார மும் உண்மைதான் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. நேரில் விசாரித்த ஓ.பன்னீர் செல்வத்திடமும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டிருக் கிறார்கள் அந்த எம்.பிக்கள். அ.தி.மு.கவின் மற்ற எம்.பி.க்களும் வீடியோ விவகாரம் எதிலாவது சிக்கி யிருக்கிறார்களா என்ற விசாரணையை ஓ.பி.எஸ் நடத்தி வருகிறார்.

பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுக்குள்ளானவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி. மேற்குவங்க மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் இன்னும் நீடிக்கும் இவர், மேலும் சில பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கங்குலி பதவி விலகவேண்டும் என்றும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தவேண்டும் என்றும் தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் மம்தாசர்மா உள்பட பலரும் வலியுறுத்துகின்றனர். கங்குலி அசைந்து கொடுப்பதாக இல்லை. நீதித்துறை வட்டாரங்களிலேயே கங்குலிக்கு எதிரான கருத்துகள் வேகமாக வெளிப்படுகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சீரமைத்து பாதுகாப்பதற்காக ரயில் பயணம் மேற்கொண்டு நிதி வசூல் செய்கிறார் பழ.நெடுமாறன். சில ரயில்நிலையங்களில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே ரயில் நிற்பதால் வசூலை திருப்திகரமாக செய்ய முடிவதில்லையாம். ஓடும் ரயிலில் மட்டும் வசூல் நன்றாக நடக்கிறது. ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் உணர்வாளர்கள் திரண்டு நெடுமாறனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு நடராஜன் நிதி கொடுத்தார் என்பதால் ஜெ. கோபமடைந்தார் என நினைக்கும் நெடுமாறனும் அவரது ஆதரவாளர்களும் ஜெ.வின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்ற கவனத்துடன் ரயிலில் நிதி வசூல் செய்கிறார்களாம்.                                               

ad

ad