விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில், கனேடியக் குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ளது.
பிரதீபன் நடராஜா என்ற 37 வயதுடைய ஈழத்தமிழருக்கே, அமெரிக்க நீதிமன்றம் நேற்று இந்த தண்டனையை அறிவித்துள்ளது.
ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான, ஏவுகணைகள், ஏகே-47 துப்பாக்கிகளை தமிழ்ப் போராளிகளுக்காக வாங்க முயன்றதாக இவர் உள்ளிட்ட குழுவினர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
பிரதீபன் நடராஜா, ஏற்கனவே 16 மாதங்கள், கனடாவிலும், அமெரிக்காவிலும் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
இவர் தனது தவறை ஒப்புக்கொண்டு அமெரிக்க நீதிமன்ற நீதிபதிக்கு மன்னிப்புக் கோரும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
எனினும் அமெரிக்க நீதிமன்றம் இவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
இதன் பின்னர் இவர் கனடாவுக்கு நாடு கடத்தப்படலாம்.
கனேடிய காவல்துறையும், அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வுப் பிரிவும் இணைந்து நடத்திய விசாரணையின் மூலம், தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள, வட அமெரிக்காவில் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிதி மற்றும் விநியோக வலையமைப்பைச் சேர்ந்த ஆறாவது கனேடியத் தமிழர் இவராவார்.
இந்தக் குற்றச்சாட்டில் ரொறன்டோவில் கைது செய்யப்பட்ட பிரதீபன் நடராஜா, மேலதிக விசாரணகளுக்காக 2012ம் அண்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. |