புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014

 தீர்மான வரைவை மேலும் வலுப்படுத்தியது அமெரிக்கா-விபரம் 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு மேலும், தெளிவான சொற்பிரயோகங்களுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக, இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அதுபோன்ற மீறல்கள், குற்றங்கள் தொடர்பாக அதைப் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாத வகையிலும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விதத்திலும் பரந்த, விரிவான விசாரணை ஒன்றை ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணையாளர் முன்னெடுத்து, அது குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முறையில், திட்டவட்டான - தெளிவான - வாசகங்களுடன் தீர்மான வரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக நம்பகமாக தெரியவந்துள்ளது.

சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நடத்தக்கூடிய விசாரணைப் பொறிமுறைக்கான வரைவிலக்கணத்தை - அந்தப் பொறிமுறை நிறைவு செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை, தற்போதைய திருத்தப்பட்ட தீர்மான வரைவு மேலும் தெளிவாகவும், குறிப்பாகவும் வெளிப்படுத்துகிறது.

கடந்த 3ம் நாள், அமெரிக்கா, பிரித்தானியா, மொறிசியஸ், மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைத்த தீர்மான வரைவின் வாசகங்கள், பல நாடுகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் - சிறிலங்காவுக்கு எதிரான விசாரணைகள் தொடர்பான ஐ.நா மனிதஉரிமை ஆணையாளருக்கு திட்டவட்டமான ஆணைகளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வழங்கும் வகையில் இந்த புதிய வரைவின் உள்ளடக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெனிவாவில் நடத்தப்பட்ட இரண்டு இணைக் கூட்டங்களின் பல்வேறு நாடுகளும் முன்வைத்த யோசனைகள், கருத்துகளின் அடிப்படையிலேயே இந்த புதிய வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரைவில் செய்யப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள் வருமாறு-

சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வரவேற்கும் ஒரு வாசகத்தில் 'இராணுவ மயப்படுத்தலை விலக்கும்' சிறிலங்கா அரசின் செயற்பாட்டை வரவேற்கும் என்பது- 'காணி உரிமையாளரின் பாவனைக்கு' செல்லும் செயற்பாட்டை வரவேற்றல் என்று மாற்றப்பட்டுள்ளது.

சிவில் சமூகத்துக்கு எதிரான அச்சுறுத்தல், பதிலடி நடவடிக்கைகள் தொடர்பாகக் கவலை தெரிவித்திருக்கும் வாசகத்தில் 'ஐ.நா. மனிதஉரிமைகள் பொறிமுறையுடன் ஈடுபட்டு பணிபுரிவோரும்' அத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்வது பற்றிய குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட்ட சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல் குறித்து அபாய எச்சரிக்கை எழுப்புகின்ற வாசகத்தில், ' தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அலையாக' எழுந்திருப்பது பற்றிய சொற்றொடர் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய செயற் திட்டம் தொடர்பான வரைவு வாசகத்தில் "அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அனைத்து அம்சங்களையும் கவனித்து நடவடிக்கை எடுக்கும் விதத்தில், அந்தத் திட்டத்தின் செயற்பாட்டை முழுஅளவில் விரிவுபடுத்த வேண்டும்" என்ற புதியதொடர் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசியலமைப்பின் 13 வது திருத்தத்துக்கு அமைவாக வடக்கு மாகாணசபை திறம்பட செயற்படுவதை உறுதி செய்யுமாறு சிறிலங்கா அரசைக் கோருகிறது." - என்ற வகையில் ஆறாவது செயற்பாட்டுப் பந்தி திருத்தப்பட்டுள்ளது.

முன்னைய வரைவில் "அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் தேவைப்பாட்டுக்கு அமைய வடக்கு மாகாணசபைக்கும் அதன் முதலமைச்சருக்கும் தேவையான வளங்களையும், அதிகாரங்களையும் வழங்க சிறிலங்கா அரசை ஊக்குவிக்கிறோம்." - என்றிருந்த வாசகம் இப்போது மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 13 வது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தும்படி திட்டவட்டமாக அரசைக் கோரும் விதத்தில் வாசகம் திருத்தப்பட்டிருக்கின்றது.

முதலாவது தீர்மான வரைவில் செயற்பாட்டு பந்தி 8 இலேயே சிறிலங்கா அரசு மீதான கடுமையான தீர்மான வாசகம் அமைந்திருந்தது.

தற்போது திருத்தப்பட்ட இரண்டாவது வரைவில், அது மேலும் இறுக்கமாக - வெளிப்படையாக - அமையும் வகையில் பின்வருமாறு திருத்தப்பட்டிருக்கின்றது

"தொடர்ந்து இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தில், தெளிவான பேறுகளைத் தரக்கூடிய தேசிய மட்ட நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அவசியமாகிறது என்ற ஆணையாளரின் பரிந்துரையையும் முடிவையும் கவனத்தில் எடுத்து,

அ) சிறிலங்காவில் மனிதஉரிமைகள் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட தேசிய மட்ட நடவடிக்கையின் முன்னேற்றத்தை மதிப்பிட்டு-

ஆ) சிறிலங்காவில் இரு தரப்புக்களினாலும் இழைக்கப்பட்டவை அல்லது மீறல்கள் புரியப்பட்டவை என்று கூறப்படும் மோசமான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அதேபோன்ற குற்றங்கள் குறித்து பரந்தளவிலான விசாரணையை முன்னெடுத்து –

தண்டனையில் இருந்து தப்பமுடியாத வகையிலும் குற்றப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையிலும், அத்தகைய மீறல்கள் இடம்பெற்றமை தொடர்பான உண்மைகளையும், சூழ்நிலை சந்தர்ப்பங்களையும், சம்பந்தப்பட்ட நிபுணர்களின் உதவியைப் பெற்று நிலைநிறுத்தும்படியும் –

இ) தற்போதைய இந்த தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மனிதஉரிமைகள் பேரவையின் 27 வது அமர்வில் வாய்மூல அறிக்கையையும், 28 வது அமர்வில் தொடர்ந்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெறக் கூடிய விதத்தில் பரந்தளவிலான எழுத்துமூல அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு - ஆணையாளரைக் கோருகிறோம்.- என்று அந்த 8 வது பந்தி திருத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இணைய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, திருத்தப்பட்ட தீர்மான வரைவு  இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ad

ad