இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி பேச்சு
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்குத்தான் வரும் என்று மு.க.அழகிரி கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தி.மு.க. பிரமுகர் சன்னவனம் துரைராஜ் இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து
கொண்டு பேசியதாவது:–
பதவி ஆசை இல்லை
பதவிக்கு ஆசைப்படாத தொண்டர்கள் என்னிடத்தில் தான் உள்ளனர். சோதனையான காலகட்டத்திலும் தொண்டர்களும், தாய்மார்களும், பெரியோர்களும் என்னிடத்தில் ஆதரவு தெரிவிப்பது மகிழ்ச்சி தருகிறது.
கட்சித் தொண்டனுக்காக நியாயம் கேட்டதால் என்னை வெளியே அனுப்பினார்கள். இதுகுறித்து இதுவரை எனக்கு உரிய தகவல் இல்லை. கடிதமும் அனுப்பவில்லை.
கட்சியில் நடப்பது கலைஞருக்கு தெரியவில்லை. முதலில் கலைஞரைக் காப்பாற்ற வேண்டும். பிறகு கழகத்தைக் காப்பாற்ற வேண்டும். தொடர்ந்து கட்சியை விட்டு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்கிக்கொண்டே இருந்தால் தேர்தலில் எப்படி ஜெயிக்க முடியும்.
3–வது இடம் தான் கிடைக்கும்
சிவகங்கை தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர். இவர் கட்சிக்காக என்ன தியாகம் செய்தார். கட்சிக்காக சிறை சென்றவரா? கல்லக்குடி போராட்டத்தில் கலைஞரோடு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவரா? அண்ணாவைத் தெரியுமா? தி.மு.க. இங்கு மூன்றாவது இடத்திற்குதான் வரும். சிவகங்கை மாவட்டத்தில் இவரைத் தவிர வேறு ஆளே இல்லையா?.
எனது மகன் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருந்தபோது, இருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றவர் கார்த்தி ப.சிதம்பரம் அவர் எனது இனிய நண்பர். ப.சிதம்பரம் நல்ல அறிவாளி. எனக்கு நான் வகித்த இலாகா பற்றி நிறைய அறிவுரை கூறியுள்ளார். தொகுதியின் வளர்ச்சிக்காக என்ன கேட்டாலும், உடனே செய்து தருவார்.
இத்தேர்தலில் தி.மு.க. 3–ம் இடத்திற்கு தான் வரும். எனவே என்ன செய்ய வேண்டும் என்பதனை புரிந்து செய்யுங்கள். மனசாட்சிப்படி வாக்களியுங்கள். பாடம் புகட்டும்படி வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.