பிள்ளையான் குழுவின் கொலையாளியும் தீனா குழு என்று அழைக்கப்படும் காடையர் குழுவின் தலைவருமாகிய கரன் என்பவர்
சமீப நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிசாரிடம் சென்ற புதன் கிழமை சரணடைந்தார்
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் வீட்டில் வைத்து ஆசிரியரான கிருஷ்ணப்பிள்ளை (தமிழ்நாட்டு மனோகரன்-புனைப்பெயர்) மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் கரன் என்பவர் நேரடித் தொடர்புடையராவார்
கொலையுடன் நேரடித் தொடர்புடைய கரன் நேற்று திங்கட் கிழமை நீதிமன்றத்தில் பொலிசாரால் ஆஜர் படுத்தப்பட்டார். இவருக்கு சார்பாக கண்ணன் சட்டத்தரணி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
நீதிபதி இவரை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்
ரீ-56 ரகத் துப்பாக்கியாலேயே இந்த ஆசிரியத் தம்பதியினர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிள்ளையானும் பிரசாந்தனும் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் .
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரசாந்தனால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கைது செய்ய பொலிசார் முற்பட்ட வேளையில் இவர் தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது