புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2015

தமிழகத்துக்கு உதவ பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள், தமிழர் சமூக மையம் ஒண்றினைவு!


சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள், தமிழர் சமூக மையம், தமிழ்ப் பாடசாலைகள்  மனிதாபிமானப் பணிக்காக ஒன்றிணைந்துள்ளன.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
வடிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மழை வெள்ளம்! ஆயினும் எளிதில் வடிந்து விடப் போவதில்லை எம் உறவுகளின் துயர்.
எம் தமிழ்நாட்டின் உறவுகளின் வாழ்வினைக் கவிழ்த்துப் போட்ட வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் வடியத் தொடங்கியிருக்கின்றது. மறுபடியும் காலநிலை மோசமடையக் கூடும் என்ற செய்திகளும் கிடைக்கப் பெறுகின்றது. ஆயினும் அவர்களின் வாழ்விடங்கள் சீராகி ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பலமாதங்கள் ஆகலாம்.
ஏன் வருடங்கள் கூட ஆகலாம். அவர்களின் இன்றைய உடனடித் தேவையினை நிறைவேற்ற பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களால் உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது அவர்களின் உடனடித் தேவையினை நிறைவு செய்யலாம்.
ஆயினும் இத்துடன் அவர்களின் இழப்புகள் பிரதியிடப்பட முடியாது. இனித்தான் மிகச் சவாலான அடுத்த கட்டத்திற்கு அவர்கள் நுழையவிருக்கின்றனர்,
அன்றாடம் தொழில் செய்து வாழ்வினை துயரோடு கொண்டு நடத்தியவர்களின் உடைமைகள் மற்றும் குடிசைகள் போன்றவற்றை மொத்தமாய் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது, கேள்விக்குறியாய் மாறியிருக்கும் அவர்களின் நாளைய வாழ்வினை சீரமைக்கும் மனிதாபிமானப் பணி புலம் பெயர்ந்து வாழும் எங்களையும் சார்ந்ததாகும்.
ஏனெனில் அவர்கள் எங்கள் சொந்தங்கள், எங்களுக்கு ஒரு தீங்கு வரும் போதெல்லாம் தன்னெழுச்சியாய் எழுந்து எம்மை அரவணைத்தவர்கள். நாம் துடித்த போதெல்லாம்
அவர்களும் துடித்தார்கள். ஏதிலிகளாய் நாம் அந்த மண்ணில் கால் வைத்த போதெல்லாம் பிரதியுபகாரம் எதிர்பாராது எம்மை ஆதரித்தார்கள், பாதுகாத்தார்கள். கடல் பிரித்தாளும் உறவு பிரியவில்லை.
வீடு, வாசல்களை இழந்து, உடமைகளை இழந்து, உறவுகளை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து அநாதரவாய் நாளைய வாழ்வை கேள்விக் குறியோடு எதிர் நோக்கி நிற்கும் அவர்களுக்கு கரம் கொடுப்போம். உங்கள் துணையாய் நாமிருக்கின்றோம் என்று புலம் பெயர் மக்கள் நாம் உணர்த்துவோம்.
அங்கு இடம் பெற்றது பேரிடர்! இயற்கையின் சீற்றத்தின் முன்னே நவீன தொழில்னுட்பம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. மின்சாரம், குடிநீர், மருத்துவம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் வழங்கல் செய்ய முடியாது தேக்க நிலைக்கு வந்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணங்களும், வாழ்விடங்களும், தொழிலாதாரங்களும் உடனடியாக கிடைத்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஒரே நாளிலோ அல்லது ஒரே மாதத்திலோ அரசாங்கத்தினால் மாத்திரம் செய்து முடிக்கக் கூடிய பணி அல்ல.
சகல வேறுபாடுகளையும் மறந்து தமிழகத்தில் தன்னார்வமாக பலர் செயல்பட்டு இழப்புகளைக் குறைக்கும் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமும் அவர்களுடன் கரம் கோர்த்து துயர் துடைப்புப் பணிகளில் உடனடியாக உதவ வேண்டும்.
தமது உறவுகள் தமக்கு என்ன செய்தார்கள் என்ற ஒரு கேள்வி நாளை அவர்களிடமிருந்து வந்து விடலாகாது.
2009 மே மாதத்தின் பின் பாரிய அளவில் மக்களை ஒன்று திரட்டி, மக்கள் பணியாற்றும் பல முன்னணி அமைப்புகளும் பிரித்தானிய தமிழர் பேரவையும் (BTF) இணைந்து தமிழக
மக்களுக்கு உதவிக் கரம் கொடுப்பதற்காக பாரிய செயற் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
பிரித்தானிய சைவத் திருக்கோவில் ஒன்றியம், நம்பிக்கை ஒளி (RAY OF HOPE), THE YOUTH PROJECT, SERENDIP CHILDREN'S HOME, ஒத்துழைப்பு (OTTHULAIPPU), LOTUS CARING HANDS, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு-UK (KILINOCHI DISTRICT PEOPLE ORGANIZATION - U K, ஹில்லிங்டன் தமிழ் சமூக நிலையம் மற்றும் TAMILS FOR LABOUR, BRITISH TAMIL CONSERVATIVES,
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) போன்ற அமைப்புக்கள் இத் துயர் துடைப்பு செயற் திட்டத்தில் இணைந்து அவசர கால அடிப்படையில் செயற்படுகின்றன.
எனவே பிரித்தானிய வாழ் உறவுகள், தமிழ்ப் பாடசாலைகள், தமிழர் சமூக மையங்கள் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் எம்மினிய உறவுகள் தங்களின் மேலான பங்களிப்பை
இச் செயற்திட்டத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்கள் வழங்கும் நிதி உதவிகள் பற்றிய விபரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் கையாளப்படும். இச் செயற்திட்டத்தில் பங்குகொண்டு செயலாற்ற அதிகமதிகமாய் தொண்டர்களையும் (VOLUNTEERS) எம்முடன் இப் புனித பணியில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
சமூகப் பொறுப்புள்ள எம் மக்கள், இளையோர், நேர்மையான சமூக நிறுவனங்கள் போன்ற அனைத்துத் தரப்பினரையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப் புதியதோர் கூட்டு முயற்சி மேலும் மேலும் எம் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளுக்கான ஆரம்பமாக அமையட்டும்.
வாருங்கள்! ஒன்றிணைந்து செயலாற்றி எம் உறவுகளின் துயர் போக்கி புது வாழ்வளிப்போம்.
மேலதிக தொடர்புகளுக்கு, 02088080465, 07753351773, 07956919511, 07814486074, 07404493745, 07956919511, 07730769317

ad

ad