மகிந்தவின் வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?- திமுகவிடம் வைகோ
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகையை தடுக்க முடியாவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது.
எனவே, மற்ற கட்சிகளைப் போல ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது.
மத்திய அரசை வற்புறுத்தி ராஜபக்ச வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும்.
அதற்கு அந்தக் கட்சி தயாரா என்று கேள்வி எழுப்பினார் வைகோ.
முன்னதாக வெளிவந்துள்ள செய்தி
ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெப்ரவரி 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: கருணாநிதி
இலங்கை அதிபர் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெப்ரவரி 8-ம் தேதி டெசோ அமைப்பினர் கறுப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற டெசோ அமைப்பினரின் கலந்துரையாடல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாக உலவி வருபவர் ராஜபக்ச. இந்தியாவுக்கு அவர் வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது.
ராஜபக்ச இந்தியா வருவதை தமிழர்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே ராஜபக்ச வருகையைக் கண்டித்து பெப்ரவரி 8-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் கறுப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.