ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற இப்போது ஒரு அவசரமுமில்லை: காங்கிரஸ்
தில்லி மாநிலத்தில் காங்கிரஸ் தயவுடன் ஆட்சி நடத்தி வரும் ஆம் ஆத்மிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதற்கு இப்போதைக்கு ஒரு அவசரமுமில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மேலும், அதன் ஆட்சி முறையில் தனது அதிருப்தியையும் காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது. குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையை கிண்டல் செய்துள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சோம்நாத் பார்தியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முகுல் வாஸ்னிக் பேசியபோது, “ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவு விவகாரம் நம் முன் வந்தபோது, பல்வேறு காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இப்படிச் சொல்வதால், ஏதோ இன்றைய சூழலுக்கு அவர்களுக்கான ஆதரவை நீட்டித்துவருகிறோம், நாளையே ஆதரவை விலக்கிக் கொண்டுவிடுவோம் என்று பொருளில்லை. இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இன்னும் நாம் அமைதி காத்திருப்போம்” என்று பேசினார்.
தில்லியில் நடைபெறும் சம்பவங்களை தங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தில்லி அரசியல் விவகாரங்களை நிமிடத்துக்கு நிமிடம் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். ஆம் ஆத்மி கட்சி மக்களுக்குக் கொடுத்துள்ள தேர்தல் கால உறுதிமொழிகளை நிறைவேற்ற, நாம் அவர்களுக்கு எந்த விதமான காலக்கெடுவும் விதிக்கவில்லை என்று கூறிய அவர், நாம் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினோம்... அதற்கு ஒரே காரணம்தான் இருந்தது. மேலும் ஒரு தேர்தலை மக்களிடம் திணித்து, பொருள் விரயத்தை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்பவில்லை என்பதால்தான் அப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்றார் அவர். இன்று ஆளுநரை சந்தித்து, ஆம் ஆத்மி அரசு மீதான தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்த வினோத்குமார் பின்னி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார் முகுல்.