புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2014


பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது
 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயம்பாளையத்தைச்
சேர்ந்தவர் பரமசிவம். இவரது 10 வயது சிறுமி வீட்டுக்கு அருகேயுள்ள தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) இரவு தனது தாயார் மற்றும் சகோதரியுடன் உறங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை சனிக்கிழமை காலை  காணவில்லை.
இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் சிறுமியைத் தேடி வந்த நிலையில் சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள  மலையடிவரத்தில் உள்ள ஆலமரத்தின் கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அடித்து துன்புறுத்தி கொலை செய்த மர்ம நபர்கள், அவரை மரக் கிளையில் தொங்க விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, வாழப்பாடி ஏ.டி.எஸ்.பி. சுப்பிரமணியன், டி.எஸ்.பி. மாதவன் ஆகியோரை எஸ்.பி. சக்திவேல் நியமித்தார்.
 இதையடுத்து ஆய்வாளர்கள் சிவக்குமார், கந்தவேல், சித்ரா, முத்தமிழ்செல்வராசன், ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி உள்ளூரைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், சேலத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
சிறுமி கொலை வழக்கில், சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்த சி.பூபதி (வயது-31), ப.ஆனந்தபாபு (வயது-29), ஆ.ஆனந்தன் (வயது-21), து.பிரபாகரன் (வயது-26), து.பாலு (எ) பாலகிருஷ்ணன் (வயது-28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பூபதி, மாணவியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர். பா.ம.கவைச் சேர்ந்த இவர், இந்த கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினராகவும், தனியார் பேருந்து நடத்துநராகவும் உள்ளார். ஆனந்தபாபு லாரி ஓட்டுநராக உள்ளார். மற்றவர்கள் பக்கத்தில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர்.
 இவர்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அப்பகுதி பெண்களிடம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏழ்மையான நிலையில் உள்ள பரமசிவத்தின் வீட்டுக்கு கதவின்றி இருந்ததை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இவர்கள், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியின் வாயைப் பொத்தி அருகில் உள்ள மலைக் குன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
 அங்கு வைத்து பூபதி, ஆனந்தபாபு, ஆனந்தன் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அதை அடைப்பதற்காக முகத்துக்கு பயன்படுத்தும் பௌடரைக் கொண்டு வெளியேறிய இரத்தத்தை தடுத்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமி உயிரிழந்து விட்டதால் அவரை ஒரு சேலையில் கட்டி சடலத்தை மரத்தில் கட்டி தொங்க விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குற்றங்களுக்கான ஆதாரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டதும் வழக்கை 6 மாதங்களுக்குள் முடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுப்போம். இதற்கிடையே 5 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைப்போம். அதேநேரம், இவர்களால் பாதிக்கப்பட்ட வேறு யாரேனும் இருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டிருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.
இதற்கிடையில், சேலம் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்ப்படுத்த போலீசார் கூட்டிவருவார்கள் அப்போது அவர்களை செருப்பு மற்றும் துடப்பம் போன்றவற்றால் அடித்து அவமானப்படுத்த சில மகளிர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் திட்டமிட்டு இருந்தன. இதை அறிந்த போலீசார், பலத்த பாதுகாப்புடன், நீதிமன்றத்துக்கு செல்லாமல் நேராக நடுவரின் வீட்டுக்கு கூட்டிச்செற்று ரிமாண்ட் செய்தனர்.

ad

ad