தேர்தலில் இணைந்து பணியாற்ற அழைப்பு! ஜெயலலிதாவுடன் பண்ருட்டி வேல்முருகன் சந்திப்பு!
வேல்முருகன், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவை திமுக தரப்பு சந்தித்தது தெரிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தரப்பும் சந்தித்தது. அப்போது தேர்தலில் தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கான பலனை நீங்கள் பெறலாம் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார். இரண்டு இடம் அல்லது கடலூர் தொகுதி மட்டுமாவது என்று கேட்டவர்களிடம், அதெற்கெல்லாம் உத்திரவாதம் கொடுக்க முடியாது, தற்போது இணைந்து பணியாற்றினால் சட்டமன்றத் தேர்தலில் அதற்கான பலனை அனுபவிக்கலாம் என்று மீண்டும் ஓ.பி.எஸ். கூறினாராம். இதையடுத்தே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
வேல்முருகன் தரப்பிலோ, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்வதாக ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வரும் 23.02.2014 ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் மூன்று பேரையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைக்கப்பட இருக்கிறது. இந்தநிலையில் ஜெயலலிதாவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்ததால் அதற்கு நன்றி தெரிவிக்கவே வேல்முருகன் அவரை சந்தித்தார் என்று தெரிவித்தனர்.