திருகோணமலை சம்பூர் உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 9 வருடங்களாக கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 234 ஏக்கர் காணியும் பொருளாதார அபிவிருத்தி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 818 ஏக்கர் காணியும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும் என
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
முதற்கட்டமாக முதலீட்டு வலயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 818 ஏக்கர் காணியை உடனடியாக சம்பூரில் உரிய மக்களிடம் கையளிக்கப்படும். இரண்டாவது கடந்த 9 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரால் பயன் படுத்தப்பட்டு வந்த சுமார் 234 ஏக்கர் நிலமும் உடனடியாக விடுவிக்கப்பட விருக்கின்றது. கடற்படை உயர் அதிகாரிகள் இதற்குரிய ஒப்புதலை அளித்துள்ளார்கள் கடற்படையினருக்கு வேறு ஒரு இடத்தில் படை முகாம் அமைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் போது கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ். தெளபீக், மாகாண சபை உறுப்பினர், கே. நாகேஸ்வரன், மீள் குடியேற்ற அதிகார சபை தலைவர் ஹரீம் பீரிஸ், மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் என். ரஞ்சனி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் சம்பூர் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 9 வருடங்களாக சம்பூர் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு சென்று மீளக்குடியேற போராடி வருகின்றார்கள். அதற்கு நல்லதொரு தீர்வு இப்பொழுது கிடைத்துள்ளது. சம்பூர் குடியேற்றம் சம்பந்தமாக நல்லதொரு தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் தற்பொழுது வழங்கியுள்ளனர். அமைச்சரவையும் சம்பூர் மக் கள் உடனடியாக மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்றே அங்கீகாரத்தை வழங்கியுள் ளது. அதற்கமைவாக இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
அத்துடன் மீளக்குடியேற்றப்பட உள்ளவர்களுக்கு அடிப்படைய வசதிகளை செய்து கொடுக்க ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவிகளை பெற பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலின் பின்னர் குழுவினர் சம்பூர் பகுதிக்கு சென்று காணிகளை பார்வை யிட்டனர்.