புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை -1)
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டார்கள். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.  


அதையடுத்து ஜெ. தரப்பு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார்கள். உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்கியதோடு, ‘டிசம்பர் 18ம் தேதிக்குள் மேல்முறையீட்டு ஆவணங்கள் அனைத்தையும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும்’ உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கியது. 

அதனால் ஜெ தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2014 டிசம்பர் 17 ஆம் தேதியே அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தது. அதையடுத்து உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கும் நான்கு மாதத்துக்கு ஜாமீனை நீட்டித்தது. உயர்நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் அமைத்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றது. இதையடுத்து யார் இந்த வழக்கில் நீதிபதியாக வருவார்கள் என்று தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், புத்தாண்டு தினத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தனி பெஞ்ச் அடங்கிய சிறப்பு அமர்வு  நீதிபதியாக சி.ஆர்.குமாரசாமியை அறிவித்தார்.  

யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? 

சி.ஆர்.குமாரசாமியின் முழுபெயர் சிக்க ராசப்பா குமாரசாமி. இவரது தந்தை பெயர் ராசய்யா. கர்நாடக அரசின் நிர்வாகப் பணியில் இருந்தவர். இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். குமாரசாமி 25.8.1953 ல் பெங்களூரில் பிறந்தார். பிறவியிலேயே சற்று கால் ஊனமுற்றவர். பெங்களூரு நேஷனல் காலேஜில் பி.எஸ்ஸி-யும், பெங்களூரு ஸ்ரீரேணுகாசாரியா சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி-யும் முடித்தார். குமாரசாமியின் மனைவி பெயர் நாகரத்தினம்மா. இவர்களுக்கு மாயசந்திரா, நயனா என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். 

1983 ல் பெங்களூரு பார் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு, கெஸ்வி கம்பெனியில் பணியாற்றியதோடு, மாவட்ட வழக்கறிஞர்களுக்கான சட்ட உதவி குழுவிலும், கர்நாடக ஸ்டேட் சுற்றுலா துறை மேம்பாட்டு கழகத்திலும் பணியாற்றியுள்ளார். பெங்களூரு விவேகானந்தா சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு காப்பீடு சட்டம் வகுப்பையும் எடுத்தோடு, தொழிலாளர்களின் சிவில் கேஸ், கிரிமினல் கேஸ்களையும் வழக்கறிஞராக இருந்து நடத்தி உள்ளார். பிறகு 1995 ஆம் ஆண்டு மாவட்ட சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். மைசூர், சிக்மங்களூர், ஹாசன், மாவட்ட அமர்வு நீதிபதியாக இருந்தார். 2005 ல் கர்நாடக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2007 ல் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணி செய்து வருவதோடு, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இவர் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பணி ஓய்வும் பெற இருக்கிறார். 

குமாரசாமி கையாண்ட  வழக்குகள்!

1. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், சிந்தாமணி தாலுக்கா கமாலப்பள்ளியில் 2000 ல் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ராமப்பா என்பவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் குடிசைக்கு தீ வைத்ததில் ஏழு பேர் தீயில் கருகி இறந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளாக கர்நாடக காவல்துறை 32 பேரை கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், 32 பேரையும் விடுதலை செய்தது. அதை எதிர்த்து கர்நாடக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை குமாரசாமிதான் விசாரித்தார். 2013 ல் கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே கொடுத்து, 32 பேரையும் விடுதலை செய்து வழக்கை தள்ளுபடி செய்தார்.  

2. 2005 ல் நித்தியானந்தா ஆசிரமத்தில் கோபிகா என்ற பெண் சீடர் காணாமல் போன வழக்கில், நித்தியானந்தா கைதுசெய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், நித்தியானந்தாவை விடுதலை செய்தது. இந்த மேல்முறையீடு மனு உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோது அதை குமாரசாமிதான் விசாரித்தார். கீழ்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையே கொடுத்து, நித்தியானந்தாவை விடுதலை செய்தார்.
 
3. இந்திய பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்த 30 ஆயிரம் கோடி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் ஈடுபட்ட அப்துல் கரீமுக்கு சிறை தண்டனை வழங்கியவர். 

நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தபோது ‘‘நேர்மையான அமைதியான மனிதர். இதுவரை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். மிகுந்த பரபரப்பாக செயல்படாதவராக இருந்தாலும், ஆவணங்களையும், சாட்சிகளையும் அடிப்படையாக வைத்தே இவருடைய தீர்ப்பு இருக்கும்’’ என்றார்கள். 

தொடங்கியது விசாரணை...

ஜனவரி ஐந்து... இந்த வழக்கில் ஜெ தரப்புக்கு எதிராக வாதிட கறுப்புப் பூனைப் படையோடு சுப்ரமணியசாமி கோர்ட்டுக்கு வந்ததால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெ தரப்பில் நவநீதகிருஷ்ணன், குமார், மணிசங்கர் செந்தில், பன்னீர்செல்வம், அன்புகரசு, செல்வகுமார், கருப்பையா ஆகியோரும், தி.மு.க. சார்பாக குமரேசன், தாமரைச்செல்வன், சரவணன், பாலாஜி, நடேசன், ராமசாமி ஆகியோரும், அரசு தரப்பில் பவானிசிங், மராடி ஆகியோரும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் குணசீலன், சம்பந்தம் ஆகியோரும் வந்திருந்தார்கள். 

நீதிபதி குமாரசாமி சரியாக 11:00 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்தார். சுப்பிரமணியன் சுவாமி எழுந்தார்...
சு.சாமி: இந்த வழக்கில் என்னையும் வாதிட அனுமதிக்க வேண்டும்.

நீதிபதி: நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?
சு.சாமி: இந்த வழக்கின் முதல் புகார்தாரர். இந்த வழக்கின் காட் ஃபாதர். என்னுடைய புகார் மனுவை ஏற்றுதான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை விசாரிக்க செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்த வழக்கில் நான் வாதிட்ட உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.  
 
நீதிபதி: உச்சநீதிமன்ற ஆணையின் நகலை கொடுங்கள்.
சு.சாமி: அதை நான் கொண்டுவரவில்லை. 

நீதிபதி: சரி! எதன் அடிப்படையில் வாதிட அனுமதி கேட்கிறீர்கள்?
சு.சாமி: ஜே.கே., பிராப்பர்டீஸ் வழக்கின் மூலமாக.

நீதிபதி: அந்த நகலைக் கொடுங்கள்.
சு.சாமி: அதை கொண்டுவரவில்லை. 

நீதிபதி: இந்த இரண்டு ஆவணங்களையும் கோர்ட்டில் சமர்ப்பியுங்கள். பிறகு பரிசீலித்து உங்களை வாதிட அனுமதிக்கலாம்.

அதனை அடுத்து சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை விட்டு கிளம்பினார்.  

‘அரசியலை உள்ளே கொண்டு வராதீர்கள்’, ‘நீதிமன்றத்தில் ஒழுங்கீனமான செயல்படக் கூடாது’ - நீதிபதி குமாரசாமியின் கண்டிப்புகள் பற்றிய விவரம் நாளை...

ad

ad