முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும்: ரில்வின் சவால்
அரசியல் ஆசை இருந்தாலும் மக்களின் ஆதரவு இன்றி மஹிந்த ராஜபக்சவினால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி சவால் விடுத்துள்ளது.
கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
தான் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின் கருத்தினை வினவிய போதே அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் இந்த பத்து வருட ஆட்சிக் காலத்தில் தேசிய ஒற்றுமையில் பாரிய விரிசல் நிலைமை உருவாகியது. மதக் கலவரங்களும் அடக்குமுறை செயற்பாடுகளுமே மேலோங்கிக்காணப்பட்டன.
சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டனர்.
நிறைவேற்று ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கின் காரணமாக மக்கள் வெறுக்கும் நபராகவே இன்று மஹிந்த ராஜபக்ச மாறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் செய்த தவறுகள், பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகள், அடக்குமுறைகள் என அனைத்தும் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளன.
மஹிந்தவின் அரச குடும்பம் செய்த மோசடிகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இவ்வாறானதொரு நிலைமை யில் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் அவரது குடும்ப அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள்.
எனினும் மஹிந்தவின் தோளில் பயணித்த ஒரு சிலர் இன்றும் அவரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்.
மக்களின் ஆதரவு இல்லாத இவர்கள் தமது அரசியலை தொடர்ந்தும் கொண்டு செல்லவே இவ்வாறாக முயற்சிக்கின்றனர். அதற்கும் மக்கள் இனிமேல் இடம்கொடுக்க மாட்டார்கள்.
எனவே மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலுக்கு வந்து அதிகாரங்களை கைப்பற்றும் முயற்சி இனியொரு போதும் நடக்கப் போவதில்லை. முடிந்தால் மஹிந்த ராஜபக்ச அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார்.