வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்த கட்டாரிமோட்டூர் கிராமத்தை சேர்ந்த சேகர், அவரது மனைவி விஜயலட்சுமி, நிவேதா, அனிதா ஆகியோர் அருகில் உள்ள சண்டியூர் என்ற கிராமத்தில் 21ந்தேதி இரவு தூக்குமாட்டி தற்கொலை செய்துக்கொண்டனர்.
இதனை துத்திப்பட்டு போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்கொலை செய்துக்கொண்ட சேகருக்கு மொத்தம் நான்கு மகள்கள். அதில், ஸ்ரீநித்யா என்ற மகளுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு தான் உறவினருக்கே திருமணம் செய்து தந்துள்ளனர். அந்த பெண்,திடீரென கடந்த வாரம் வீட்டைவிட்டு போய்விட்டார். எங்கு போனார், என்ன ஆனார் எனத்தெரியாத நிலையில் இதுப்பற்றி வாணியம்பாடி தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் தந்திருந்தனர்.
அதில், அந்த பெண் யாருடனோ ஓடிப்போய்விட்டார் என தகவல் வர, இதில் மனம் நொந்துப்போன சேகர் குடும்பத்தார் கடந்த 21ந்தேதி இரவு வீட்டை விட்டு வந்து சண்டியூர் என்ற இடத்தில் வேட்டி என்பவரின் விவசாய நிலத்தில் தற்கொலை செய்துக்கொண்டனர். தற்கொலை செய்துக்கொண்ட இடத்தில் இரண்டு கடிதங்கள் இருந்தன. அதில், என் மகள் எங்கே சென்றார், காதலித்தாரா இல்லையா என்பது எங்களுக்கு சத்தியமாக தெரியாது. என் மகளை கணவரும், மாமியாரும் ஏதாவது செய்துவிட்டார்களா, இல்லை யாருடனாவது சென்றுவிட்டாளா என்பது தெரியாது, எங்களை மன்னித்துவிடுங்கள் என எழுதியிருந்தார்.
எங்கே போனார் ஸ்ரீநித்யா என போலிஸார் தேடிவந்த நிலையில் 23ந்தேதி மாலை வாணியம்பாடி டி.எஸ்.பிவனிதாவிடம் சரணடைந்தார் ஸ்ரீநித்யா. விசாரணையில், என் தங்கை காதல் திருமணம் செய்துகொண்டவள். அவளுக்கு பின்பே எனக்கு திருமணமானது. அவள் கணவருடன் சண்டை வந்து எங்கள் வீட்டில் உள்ளார். திருமணம் செய்துக்கொண்டு போன எனக்கும் என் கணவர் குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்தது. என் தந்தையுடம் சொன்னேன். வீட்டுக்கு வந்துவிடு என்றார். நானும் வீட்டுக்கு போனால் நன்றாக இருக்காது என்பதால் திருப்பூருக்கு நண்பர் ஒருவர் மூலமாக வேலைக்கு செல்லலாம் என சென்றேன். ஆனால் இப்படி நடந்துவிட்டதை அறிந்து திரும்பி வந்தேன் என்றுள்ளார்.