கமுதி நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் சரண்
தேர்தல் வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையொட்டி, கமுதி நீதிமன்றத்தில், நடிகர் பாக்கியராஜ் 22.10.2012 அன்று சரண் அடைந்தார்.
கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வ.சத்தியமூர்த்தியை ஆதரித்து கமுதி, பெருநாழி ஆகிய ஊர்களில் நடிகர் பாக்கியராஜ் 2011-ம்
ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி பிரசாரம் செய்தார்.அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் சென்றதாக நடிகர் பாக்கியராஜ், வேட்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் சிலர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பெரும்பாலானோர் கமுதி நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் நடிகர் பாக்கியராஜ், கமுதி நீதிமன்றத்தில் சரண் அடையாததால், அவரை கைது செய்யும்படி போலீசாருக்கு கமுதி நீதிமன்ற குற்றவியல் நடுவர் பி.எஸ்.கௌதமன் உத்தரவிட்டார்.
இதையடுத்து கமுதி நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் 22.10.2012 காலை 11 மணியளவில் வழக்குரைஞர் கே.ரமேஷ் கண்ணனுடன் வந்து குற்றவியல் நடுவர் கௌதமன் முன்னிலையில் சரண் அடைந்தார்.
அவரை ரூ.3,000 பிணையத் தொகை செலுத்தி, 2 தனி நபர்கள் ஜாமீனை ஏற்று, விடுவித்தார். மேலும் நவம்பர் 23-ல் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி குற்றவியல் நடுவர் கௌதமன் உத்தரவிட்டார்.