வடமாகாண உறுப்பினர் ரவிகரனுடன் கொழும்பு சென்ற மக்களை பலவந்தமாக திருப்பியனுப்பிய இராணுவம்
கொழும்பில் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் நடைபெற இருந்த மனித உரிமைகள் தொடர்பிலான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், சென்றிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் வைத்து தடுக்கப்பட்டு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் இரு பேருந்துகளில் சென்ற, உறவுகளைத் தொலைத்தொரே இவ்வாறு மதவாச்சியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மதவாச்சி வளைவுச் சந்தியில் முல்லைத்தீவிலிருந்து சென்ற பேருந்தை காலை 6.05 மணியளவில் மறித்த இராணுவத்தினர் சுமார் ஒன்றரை மணி நேரமாக நடுத்தெருவில், தமிழ் மக்களை தடுத்து வைத்துள்ளனர்.
இதன்போது புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், பொலிசார் என சுமார் 15 இற்கும் மேற்பட்ட தடவைகள் மக்கள் அவ்விடத்தில் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டனர். இதன் பின்னர் ரவிகரன் உள்ளிட்ட அனைத்து மக்களும் மதவாச்சி காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களை& தடுத்து வைத்த பொலிசார் மீண்டும் மாற்றுப்பாதையூடாக மதவாச்சி சந்திக்கு கொண்டு சென்று வவுனியா நோக்கி திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிளிநொச்சியிலிருந்து வந்த மற்றைய பேருந்தும் அங்கெ தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
உறவுகளுக்கு நீதிகோரி செல்கின்ற தம்மை கொழும்பு செல்ல அனுமதிக்குமாறு உறவுகளைத் தொலைத்தொரின் உறவினர்கள் மதவாச்சியில் அழுது கேட்டதாக தெரிகிறது.
ஆனால், அங்கு அவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பலவந்தமாக வவுனியா நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது இரு பேருந்துகளும் வவுனியாவை அண்மித்துள்ளன.