புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை கேட்டு நவநீதம்பிள்ளை-இவர் இலங்கை அரசுக்கு எழுதிய அறிக்கை வெளியான மர்மம்  என்ன ?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.


இந்த அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, இலங்கை அரசாங்கத்தின் பார்வைக்காக, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க ஊடாக கடந்த வாரம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தை கடுமையாக குற்றம்சாட்டும் வகையிலான இந்த அறிக்கை, 20 பக்கங்களைக் கொண்டதாகவும், 74 குறிப்புகளை உள்ளடக்கியதாகவும், அமைந்திருந்தது.

இதுகுறித்துப் பதிலளிக்க இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரால் கடந்த 12ம் நாள் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

தீவிர ஆலோசனைகளுக்கப் பின்னர், இலங்கை வெளிவிவகார அமைச்சு ஒவ்வொரு குறிப்புக்கும் பதிலளித்து, தயாரித்த அறிக்கை, ரவிநாத் ஆரியசிங்க மூலம் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் வரும் மார்ச் 3ம் நாள் ஆரம்பிக்க சில நாட்கள் முன்னதாக, நவநீதம்பிள்ளையின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.

எனினும், இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்களை கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், எந்தவொரு உள்நாட்டு செயல்முறைகளை கண்காணிப்பதற்கும், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் இலங்கை  அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. வெறுப்பைத் தூண்டுதல், சாட்சிகளைப் பாதுகாத்தல், தகவல் உரிமை, பலவந்தமாக காணாமற்போதல் குற்றங்கள் போன்றன குறித்த தற்போதுள்ள சட்டங்களை மீளாய்வு செய்து, அனைத்துலக மனிதஉரிமை சட்டத்தின் தரத்துக்கு கொண்டு வர வேண்டும்.

2. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கான விதிமுறைகளை நீக்க வேண்டும்.

3. சிறுபான்மை சமூகத்தினர், ஊடகங்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், சாட்சிகள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

4. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் உள்ளிட்ட, மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அனைத்துலக உதவியுடன், சுதந்திரமான, நம்பகமான குற்றவியல் மற்றும் தடயவியல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. அனைத்துலக தரத்துக்கேற்ப விரிவான, அணுகுமுறையின் ஒரு பகுதியாக, இடைக்கால நீதியை வழங்கும் விதத்தில், தேசிய இழப்பீட்டுக் கொள்கையை உருவாக்குவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்.

6. காணாமற்போனவர்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, தீவின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமற்போனவர்கள் குறித்தும், காணாமற்போதல்கள் நிகழ்ந்த எல்லாக் காலங்களிலும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் விசாரிக்கும் வகையில், அதன் விசாரணை இலக்கை விரிவுபடுத்த வேண்டும்.

காத்திரமான பரப்புரைகளின் மூலம், பொதுமக்களுக்கு இதுபற்றித் தெரியப்படுத்தி, எல்லா முறைப்பாட்டாளர்களினதும், முறைப்பாடுகளை சமர்ப்பிக்க போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும்.

7. இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் இறுதி அறிக்கை, 2006ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி  ஆணைக்குழுவின் அறிக்கை என்பனவற்றை பகிரங்கப்படுத்தி, அண்மையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அந்த சான்றுகளை மதிப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.

8. படைக்குறைக்குப்பு மேலதிக நடவடிக்கைகளை எடுத்து, அமைதிக்கால மட்டத்திற்கு படைத் தலையீட்டைக் குறைப்பதற்கு அர்த்தமுள்ள, வெளிப்படையான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும், படைக்கலைப்பு, ஆயுதக்களைவு, பொதுமக்களின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு தெளிவான காலஎல்லையை வகுக்க வேண்டும்.

9. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, இன்னும் முழுமையாக, செயற்படுத்துவது குறித்து சிவில், சமூக மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகளுடன், கலந்தாலோசிக்க வேண்டும்.

10. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் ஒரு தேசிய நினைவு நாளை அனுஷ்டிப்பதுடன், எல்லா பொதுமக்களும், தனியாகவோ குழுவாகவோ, நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும், போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பொருத்தமான நினைவுச்சின்னங்களை அமைப்பது குறித்து தேசிய அளவில் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.

11. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் தொழில்நுட்ப உதவியை ஏற்பது குறித்து சாதகமான கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

12. பலவந்தமாக காணாமற்போனவர்கள் குறித்த பணிக்குழு மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சுதந்திர நிபுணர் உள்ளிட்ட, சிறப்பு ஆணையாளர்களுக்கு 2014ம் ஆண்டில் அழைப்பு விடுக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தரவுகளடங்கிய நவநீதம்பிள்ளையின் அறிக்கை கசிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

ad

ad