புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2015

லீ குவான் யூ உடல் அடக்கம்: மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு!


 சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஆங்கிலேயர்களின் காலனி  நாடாக இருந்த சிங்கப்பூரை,  உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும்படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்  லீ குவான் யூவ்.


சிங்கப்பூரின் முதல் பிரதமரான இவர், உடல்நலிவால் கடந்த  பிப்ரவரி மாதம் முதல்  சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 23 ஆம் தேதி  மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு சிங்கப்பூர் தாண்டி உலக நாட்டுத் தலைவர்கள் அனைவரும் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். ஒரு குட்டி நாட்டின் தலைவருக்கு உலகம் உண்மையான மரியாதையை செலுத்தியுள்ளது.

அவரின் மறைவையொட்டி சிங்கப்பூரின் நகரங்களில் எங்கு பார்த்தாலும் படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் லீயின் புகழ் நினைவூட்டப்படுகின்றன. அன்று முதலே அவரின் உடலுக்கு பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலியை, கனத்த இதயத்தோடு கண்ணீர் வழிய செலுத்தினர். லீ குவான் யூ உடலுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சிங்கப்பூரில் இன்று மழையும் லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.
இந்நிலையில், லீ குவானின் உடல் அடக்கம் செய்வதற்காக, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் சாலை, கன்டோன்மென்ட் சாலை, கிளமெந்தி சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது, ஹெலிகாப்டர்களில் இருந்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, லீ குவான் யூவின் உடல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாக பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோத், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விதோதோ, மலேசிய அரசர் அப்துல் கலீம் ஷா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
லீ யின் இறுதி சடங்கையொட்டி சிங்கப்பூர் முழுவதும் சோகமயமாக காட்சி அளித்தது.
இதற்கிடையே,  லீ குவான் யூவின் இறுதிச் சடங்கு நடைபெறுவதையொட்டி இன்று (29ஆம் தேதி) இந்தியாவில் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் இன்று நடைபெறவில்லை.

ad

ad