வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் விவகாரங்களை கவனிக்கும் வகையில் அமைச்சு அல்லது திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின், மிட்ல்செக்ஸ், பார்ன் ஹில் கன்ரி நிலையத்தில் கடந்த மே 2015 அன்று நடத்தப்பட்ட இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வதிவிடத்தை கொண்டிராத இலங்கைத் தமிழர்களால் இந்தக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக்கலந்துரையாடலுக்கு இடைக்கால தலைவர் வி.சிவலிங்கம் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் பாரி காடெனரும் இதில் பங்கேற்றார்.
இதன்போது அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான சாந்தன் தம்பா உரையாற்றும் போது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அமைச்சு உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கை வம்சாவளிகளான பிரித்தானியாவில் உள்ள சுமார் 3லட்சம் தமிழர்களை இலங்கையின் சமாதான வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில் இந்தக்கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் விரும்புகிறவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமைகளை பெற்று அவர்கள் இலங்கையின் நடப்புக்களுக்கு உதவமுடியும்.
ஏற்கனவே பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியர்கள் இவ்வாறான ஒரு அமைப்பை உருவாக்கி, தமது நாட்டுக்கு சேவை செய்துவருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.